Friday, November 14, 2008

"ஆடவர் குணங்கள்"

"ஆடவர் குணங்கள்"

பேராண்மை மிக்க ஆண்கள் பெண்களின் அனுக்கத்திற்குக் கிடைப்பதில்லை என்பது சரியான கருத்துதானா?

பேராண்மை மிக்க ஆண்கள் அனைவரும் விவேகானந்தராகவோ,பெரியாராகவோதான் இருக்க முடியும் என்பது ஒரு மூடிய சிந்தனையாகத் தோன்றவில்லையா?

அவர்கள் வெளித்தெரியாமல் போகிறார்கள் என்பதாலேயே இவ்வகை கல்யாணகுண ஆண்கள் இல்லை என்பது அர்த்தமில்லையே!வேண்டுமானால் அவர்களின் விகிதாசாரம் குறைவு என்பதை ஏற்றுக் கொள்ள முடிகிறது.

அதற்கும் பிள்ளைகளின் வளர்ப்பின் மூலம்,பெண்களே ஒரு வகையில் காரணம் என்பதுதான் வாழ்வின் விநோதம்.ஆண் என்னதான் நேரம் ஒதுக்கினாலும் பரினாம இனக் கவர்ச்சி விதிகளின் படி ஆண்குழந்தைகள் பெருமளவு தாயின் கவன ஈர்ப்பிலேயே வளர விரும்புகிறார்கள் என எண்ணுகிறேன்.

என் தாயும் கூட சிறுவயதில் என்னைத் கண்டிக்க நேர்ந்தால்,"உன் பெண்டாட்டி வந்து,பிள்ளை வளர்த்து வைத்திருக்கிறாள் பார் இது போல்,என என்னைத்தான் நோவாள்,எனவே இது போல செய்யாதே,என...

எனவே நல்ல கணவர்கள் உருவாவது நல்ல தாய்களாலேயே சாத்தியம் என நினைக்கிறேன்.

Note:Please remove word verificaiton in commment moderation settings

Thursday, November 13, 2008

"டோண்டு பதில்கள் - 14.11.2008"

"டோண்டு பதில்கள் - 14.11.2008"

>>1. ஒரு சொட்டு விந்து என்பது நூறு சொட்டு ரத்தத்துக்கு சமமாமே? உண்மையா? விளக்கவும்.பதில்: உண்மையல்ல. காலம் காலமாக நிலவும் எல்லா கற்பனைகளும் அறிவியல் பூர்வமானவை அல்ல. அப்படிப்பட்ட ஒரு முழுக் கற்பனைதான், ரத்தம்தான் விந்துவாக மாறுகிறது என்பதும்! ரத்தம் போன்று உடலுக்கு முக்கியமான இன்னொரு திரவம் விந்து என்பதற்கு மேல் இரண்டுக்கும் பொருத்தமில்லை. உடலில் இருக்கும் சிறுநீரும் முக்கியமான திரவம்தான். ஒழுங்காக சிறுநீர் உற்பத்தியாகி வராவிட்டால், ஜீரண உறுப்புகளும் சிறுநீரகமும் சரியாக வேலை செய்யவில்லை என்று பொருள். சிறுநீரும் விந்துவும் ரத்தமும் முக்கியமானவை. ஆனால், ஒன்றிலிருந்து இன்னொன்று உருவானவை அல்ல.எனவே, விந்து என்பது ரத்தமும் அல்ல; பல சொட்டு ரத்தம் சேர்ந்து உருவானதும் அல்ல! அது உயிரணுக்கள் அடங்கிய ஒரு திரவம். அதில் இருப்பவை அமினோ ஆசிட்கள், சிட்ரேட், என்சைம்கள், சர்க்கரைப் பொருளான ஃபிரக்டோஸ், புரதங்கள், விட்டமின் சி, சிட்ரிக் ஆசிட், பாஸ்பேட்டுகள், துத்தநாகச் சத்து போன்றவைதான்.உயிரணுவில் இருக்கும் டி.என்.ஏ வைப் பத்திரமாக வைத்திருப்பது, உயிரணு உறைந்துவிடாமல் அதைப் பெண்ணின் யோனிப் பாதை வழியே கருப்பை வரை எடுத்துச் செல்லும் ஒரு வாகனமாகப் பயன்படுவது, அப்படிச் செல்லும்போது அதைப் பெண் உடலில் உள்ள எதிர்ப்பு அணுக்கள் கொன்றுவிடாமல் காப்பாற்ற உதவுவது என விந்துவில் இருக்கும் பொருட்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு நோக்கமும் பயனும் உடைய, நுட்பமான பல அம்சங்கள் உள்ளன.ஒரு சிறுவனின் விதைப் பைகள் தினமும் உயிரணுக்களை உற்பத்தி செய்து கொண்டே இருக்கின்றன. எத்தனை உயிரணுக்கள் தெரியுமா? பல கோடி உயிரணுக்கள்! தினசரி!அவற்றுடன் இதர சுரப்புகளும் சேர்ந்து, அவை முதிர்ச்சியடைய சில வாரங்கள் பிடிக்கும். முதிர்ந்த நிலையில், இதர இனப்பெருக்க உறுப்புகள் சுரக்கும் திரவங்கள் சேர்ந்து, விந்து சேகரப்பைக்குச் செல்லும் திரவத்தைதான் ‘செமென்’ எனப்படும் விந்து என்கிறோம்.ஒரு சிறுவனின் உடலில் தினசரி தயாராகும் உயிரணுக்களும் விந்துவும் என்ன ஆகின்றன? சுய இன்பத்தின் மூலம் விந்து வெளியேறலாம். இரவு படுக்கையில் சுகமான கனவுகளின் விளைவாக வெளியேறலாம். இவை இரண்டுமே இல்லாமல், ஒரு சிறுமியின் உடலில் தயாராகும் சினைமுட்டையும், கருப்பையின் உட்புறப் பூச்சும் மாதாமாதம் வெளியேற்றப்படுவது போல, சிறுவனுக்கு இவை இயல்பாக வெளியேற வழிதான் என்ன?அப்படி எதுவும் இல்லை. விந்துவில் இருக்கும் வெவ்வேறு பொருட்கள் உடலுக்குள்ளேயே கரைந்து கலந்துவிடுகின்றன. புதிது புதிதாக உயிரணுக்களை சிறுவனின் விதைப் பைகள் தயாரித்து அனுப்ப அனுப்ப... புதிய விந்துவும் தயாராகிக்கொண்டே இருக்கிறது.உடலுறவிலோ, சுய இன்பத்திலோ, இரவுக் கனவிலோ வெளியேற்றப்படும் விந்துவில் வெறும் ஒரு சதவிகிதம்தான் உயிரணுக்கள் எனப்படும் ‘ஸ்பெர்ம்’ இருக்கிறது. மீதி திரவம் எல்லாம், துணை செய்ய வந்த சுரப்புகள்தான். நன்றி ஞாநி. இந்த விஷயத்தில் "Everything you wanted to know about sex, but were afraid to ask" என்ற தலைப்பில் சமீபத்தில் 1972-வாக்கில் வந்த புத்தகத்தில் இது சம்பந்தமாக இவ்வாறு கூறியிருப்பார்கள். கைமுட்டி அடிப்பவர்களை உங்கள் கேள்வியில் உள்ளதை கூறி பயமுறுத்துவார்கள். ஆகவே இது சம்பந்தமாக கைமுட்டி அடிப்பவர்கள் பயப்படத் தேவையில்லை. சக்தி எல்லாம் வீணாகாது. என்ன, அடிக்கடி கைமுட்டி அடித்தால் உங்கள் காதுகள் கீழே விழுந்து விடும். கடைசி வரிக்கான அடிக்குறிப்பு இவாறு கூறுகிறது. “பயப்படாதீர்கள் இது சும்மா விளையாட்டுக்கு கூறியது”. >>
ராகவன் ஐயா,
இது தவறான பதில்.

இன்றைய அறிவியல் விளக்க முடியாத சில விஷயங்கள் உலகில் உண்டு.

அறிவியல் ரீதியாக விந்து வீணாவதில் ஒன்றும் பிரச்னை இல்லை என்பது இன்றைய அறிவியல் அறிந்த ஒன்று;ஆனால் இன்றைய அறிவியல் இன்னும் அறியாத விதயங்களில் ஒன்றாக இது இருக்கலாம் அல்லவா?

மில்கி வே என அறிவியல் அறிந்த உண்மையை சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்பே மாணிக்க வாசகர் அண்டப் பகுதியின் உண்டப் பெருக்கம்;அளப்பரும் காட்சி எனச் சொல்லிச் சென்றார்.

அது போலவே விந்து சமாச்சாரங்களைப் பற்றியும் திருமந்திரம் பேசுகிறது;100 ரத்தத்துளிகள் சேர்ந்து ஒரு துளி விந்து உருவாகிறது என்பது விந்து வீணாக்கப் படக் கூடாது என்ற கருத்துப் பற்றியே கூறப் பட்டது.

வீணாக்கப் படாத பட்சத்தில் விந்து மீண்டும் உடலில் கலந்து உடலை உரமாக்குகிறது.

விந்து வீணாக்காதவர்களின் உடல் அதிக எதிர்ப்பு சக்தி கொண்டு வீரியம் பெற்று விளங்குகிறது;மாறாக கரமைதுனப் பழக்கம் இருப்பவர்களின் உடல் விரைவில் நொந்து வீரியமற்றுக் கெடுகிறது.அவர்களின் குழி விழுந்த கண்களும் பஞ்சடைத்த விழிகளும் டொக்கு விழுந்த உடலும் இதை எளிதாக உணர்த்தும்.எனவேதான் விந்து விட்டவன் நொந்து கெட்டான் என்ற மொழிவழக்கு வந்தது.

மாறாத பெண்ணுடன் அளவான நீண்ட கால உடலுறவின் மூலம் ஆண் பெண்ணின் சுக்கில சுரோனிதங்கள் ஒத்திசைந்து உடல் ஆக்கம் பெறுகிறது.(உடலுறவின் போது பெண்ணின் திரவங்கள் சில சிறிய அளவில் ஆணிலும் கலக்கின்றன;எனவேதான் மேற்கூறிய கூற்று ஏற்பட்டது)

தரவுகளுக்கு திருமந்திரம்,சித்தர் பாடல்கள்,சித்பவானந்தரின் எதிர்கால இந்தியா போன்ற புத்தகங்களை நாடலாம்.

ஏற்கனவே பல பிழையான கருத்தாங்கங்களால் நொந்து வரும் இளையர்களை மேலும் நசிய வைக்கும் இது போன்ற கருத்துக்களை அறுபது வயது கடந்த நீங்கள் கூறாமலிருப்பது அனைவருக்கும் ஆரோக்கியமான ஒன்று.

Wednesday, October 1, 2008

"சில வெளிப்படையான எண்ணங்கள்"

"சில வெளிப்படையான எண்ணங்கள்"

நன்று ராகவன் அவர்களே..

உங்கள் இந்தப் பதிவின் அனைத்தையும் வரவேற்கிறேன்,ஒன்றைத் தவிர..

>>பார்ப்பன ஜாதியில் பிறந்ததற்குப் பெருமிதம் அடைகிறேன். >>

இந்த கூற்றுக்கும்,விஜய் தொலைக்காட்சியில் உளறிய அந்த அய்யங்கார் பெண்ணுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

ஒரு இனத்துக்கு எதிரான அரசு ரீதியான ஒடுக்குதல்கள்,அது பார்ப்பனரோ அல்லது வேறு இனமோ,சுத்த அயோக்கியத்தனம் என்பதுதான் என் நிலைப்பாடு..

ஆனால் ஒரு சாதியில் பிறந்தேன் என நான் பெருமைப்படுகிறேன் என்ற கூற்றில் மறைமுகமான சாதீய விதயங்கள் சுட்டப் படுகின்றன என்பதை நீங்கள் உணர்ந்தே இக்கூற்றை முன் வைக்கிறீர்களா?

அந்தணராகப் பிறப்பதில் எந்தப் பெருமையும் இல்லை;அந்தணராக வாழ்ந்தால் அதில் பெருமை இருக்கிறது.அந்தணர் என்பவர் அறவோர் என்கிறது தமிழ்நீதி.

அந்தணராகப் பிறந்ததாலேயே நான் அறவோன் என்பதல்ல அர்த்தம்;அறவோனாக வாழ்வதால் நான் அந்தணன் என்பதே பொருள்,அவன் புலையனாகப் பிறந்திருந்தாலும் கூட!

யார் பிராமணன் புத்தகத்தில் சோவும் கூட இதையே சுட்டுகிறார்..

பலவற்றில் ஆழ்ந்து யோசிக்கும் நீங்கள் ஏன் இப்படி ஒரு குறுகிய மனப்பான்மை சொற்றொடரை உபயோகித்தீர்கள் என அறியேன்..

Tuesday, September 30, 2008

என்றே அண்ணா அன்றே சொன்னார்

என்றே அண்ணா அன்றே சொன்னார்
ஒரு சீரியஸ் விதயம் தொட்டிருக்கிறீர்கள்.

இதற்கான வேர்கள் சுதந்திர இந்தியாவின் தொழிற்கொள்கையிலிருந்து தொடங்குவதாக எனக்குப் படுகிறது.குரு சரன் தாஸின் இந்தியா அன்பவுன்ட் ஆங்கிலப் புத்தகத்தை வாசித்துப் பாருங்கள்...

எல்லாமே அரசு சார்ந்த தொழில்களாக மாறும் போது பெரும்பான்மை மக்கள் சம்பளக் காரர்களாக மட்டுமே மாறும் நிலை வருகிறது.

மக்கள்தொகை விகிதம் இந்த வேலையளிக்கும் விகிதத்தை மீறும் போது இல்லாமை அதிகரிக்கிறது.

வேலைகள் குறையும் போது அது சார்ந்த போட்டிகள்,பாகுபாடுகள்,இந்தப் பாகுபாடுகளை தங்களுக்குச் சாதகமாக வளைக்கும் சில கட்சிகள் என எல்லாமே ஒரு விஷ வட்டத்திற்குள் போகிறது.

இதன் விளைவே எதிர்மறை சிந்தனைகள் பலம் பெறுவதும்,கொண்டாடப்படுவதும்..

பரவலான சுயதொழிலாளர்கள் பெருகினால் இந்த நிலை இருக்காது என்பது ஒரு சிந்தனை.இதனோடு கிராமம் சார்ந்த தொழில்கள் நசிந்து போனது...

நகரங்கள் வளர்ந்த வேகத்தில் நான்கில் ஒரு பங்கு கிராமங்கள் வளர்ந்திருந்தால் இத்தகைய அவலங்கள் இல்லாதிருப்பதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கின்றன என்பதை மறுக்க முடியவில்லை.

Wednesday, September 17, 2008

தகப்பனுக்கு மிகப்பெரிய தலைக்குனிவை உண்டாக்க இருந்த சீதை

தகப்பனுக்கு மிகப்பெரிய தலைக்குனிவை உண்டாக்க இருந்த சீதை

அறிவன்#11802717200764379909 said...
நண்பரே..உங்கள் வாதம் சரியானதுதானா?

அக்காலத் தமிழகம் கற்புமனம்,களவுமனம் இரண்டும் நிகழ்ந்த களம்.

சீதை ராமனைப் பார்க்கிறாள்;விரும்புகிறாள்..

வில் ஒடிக்கப்படுகிறது.

வில் ஒடித்தவன் யாரென்று நீலமாலை கூறுகிறாள்,கோமுனி உடன் வரு கொண்டல்' என...

சீதையும் ‘தாமரைக் கண்ணினான் என்ற தன்மையால்,ஆம் அவனே கொல்' என் ஐயம் நீங்கினாள்..

பின்னர் 'சொல்லிய குறியின்,அத் தோன்றலே அவன்,அல்லனேல் இறப்பன்'என்று அகத்துள் உன்னினள்.

யாரிடமும் சொன்னாளில்லை,எண்ணுகிறாள்,அவ்வளவே..

ஒரு கிரிட்டிகல்'ஆன நிலையில் இருக்கிறோம்,ஐயோ இது மட்டும் நடக்க வில்லையெனில் நான் செத்தே போய் விடுவேன் என நினைக்கிறோம்.

காரியம் நடந்தால் மகிழ்ச்சி,நடக்காமல் போனால் செத்தா போய்விடுகிறோம்?

மனித மனத்தின்,எண்ணத்தின் வீச்சு அது;எண்ணுகின்ற எண்ணம் எல்லாம் செயல்படுத்தி விடுகிறோமா?

அதை பண்பாட்டுடன் முடிச்சிடுவது சற்று அதிகமோ எனத் தோன்றுகிறது.

ராமனின் நிலை ஒன்றும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை;அவனும் மருகுகிறான்..

ஆனாலும் சமாதானமடைகிறான்,எப்படி?

நம் மனதில் தோன்றும் எண்ணம் கெட்டதாக இருக்க முடியாது என..ஆகும் நல்வழி,அல்வழி ஆகுமோ என் மனம் ...பைந்தொடி கன்னியே ஆகும்..எனவும் தனக்கே நம்பிக்கையை வளர்த்துக் கொள்கிறான்.எனவே இருவர் நிலையும் மருகும் நிலைதானே??

******************************************************************************

அறிவன் சார்,

ராகவன் அவர்களுக்குச் சொன்னதையே உங்களுக்கும் சொல்கிறேன்.

நான் இலக்கியம் தொடர்பான பதிவுகள் போடுவது பொதுவாக ஒரு முடிவுக்கு வந்து அல்ல; முடிவுக்கு வருவதற்காக.

நீங்கள், குமரன், ராகவன், ரவிஷங்கர் போன்று சிலர் இருக்கிறீர்கள், திருத்த, கூடுதல் தகவல் சொல்ல, புதிய கோணம் காட்ட என்று.

//பின்னர் 'சொல்லிய குறியின்,அத் தோன்றலே அவன்,அல்லனேல் இறப்பன்'என்று அகத்துள் உன்னினள்.

யாரிடமும் சொன்னாளில்லை,எண்ணுகிறாள்,அவ்வளவே..

ஒரு கிரிட்டிகல்'ஆன நிலையில் இருக்கிறோம்,ஐயோ இது மட்டும் நடக்க வில்லையெனில் நான் செத்தே போய் விடுவேன் என நினைக்கிறோம்.

காரியம் நடந்தால் மகிழ்ச்சி,நடக்காமல் போனால் செத்தா போய்விடுகிறோம்?//

இது எனக்குப் புதிய கோணமாகப் படுகிறது. நன்றி.

Thursday, September 11, 2008

"பக்தியா? எல்லை கடந்த நெருக்கமா? ஒன்றாகி விட்டதால் சுய கேலியா?"

"பக்தியா? எல்லை கடந்த நெருக்கமா? ஒன்றாகி விட்டதால் சுய கேலியா?"




ரத்னேஷ்,
நாளாக ஆக கலக்குகிறீர்கள்.

நீங்கள் தொட்டிருப்பது ஒரு முக்கியமான குறிப்பு.

இதற்கான சான்று/பண்பு தமிழ் மொழி/பண்பாட்டிலிருந்து வந்தது.

ஹிந்து மதம் என்ற ஒன்று பிற்காலத்தில் 'சமைக்கப்பட்டது' சமச்கிருதம் போல.

என்னுடைய தமிழும்,சிவமும்-இன்னபிறவும் தொடரில் இவற்றை முழுதாக அலசும் உத்தேசம் இருக்கிறது.

நேரமேலாண்மை பிரச்னைகளால் இத்தொடர் முடிவு படுவது தள்ளிப் போகிறது.

But,in all,an excellent posting.

Keep up your reading,than writing..you will turn to be an excellent writer & human in total.

kudos.

Tuesday, September 9, 2008

"ஞாநியும், கருணாநிதியும் இன்ன பிற நண்பர்களும்"

"ஞாநியும், கருணாநிதியும் இன்ன பிற நண்பர்களும்"

வால்பையன்,சரியான ஒரு நோக்கில் எழுதப்பட்ட ஒரு பதிவு.

நமது அரசியலில் அது திமுக வானாலும் சரி,அதிமுக வானாலும் தனி மனிதத் துதிதான் விஞ்சுகிறது.

கருணாநிதியோ,ஜெயலலிதாவோ ஒரு ஆட்சியின் தலைவர்கள்,அவர்கள் சறுக்கும் போது சுட்டவும்,குட்டவும் பத்திரிக்கையாளர் இருப்பார்,இருக்க வேண்டும்-அதுதான் ஜனநாயகம்.

ஏன் கருணாநிதியையே பற்றி எழுதுகிறார் என்றால்,அது தவிர்க்க இயலாதது-அவர்தான் ஆட்சியின் தலைவர்.

இதே ஞாநி ஜெ.ஆட்சியிலும் அவரை விமர்சித்து எழுதி இருக்கிறார்.

நீங்கள் சுட்டியபடி ஞானியின் கேள்விகளுக்கு மறுப்புகள் தான் வந்தனவே யொழிய பதில்கள் இல்லை.

இதே கதை தேசிய அளவிலும் அருண்ஷௌரியின் கேள்விகளுக்கும் ஏற்படுகிறது;நமது நிதி அமைச்சரிலிருந்து,பிரதமர் வரை யாரும் அவர் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் சொல்வதில்லை.

இவற்றை சுட்டினால் பார்ப்பனீயம்,பூணூல் நெளியும் என்று பிதற்றவே பெரும்பாண்மைக் கூட்டம் தயாராக இருக்கிறது.

60 களில் இருந்து தமிழக அரசியலின் சாபம்தான் இது !

Friday, July 18, 2008

அணு சக்தி, ஒரு மாறுபட்ட பார்வை

அணு சக்தி, ஒரு மாறுபட்ட பார்வை

நல்ல வாதப் பிரதிவாதங்கள்.நீர் நம்மிடம் அதிகமாக இல்லை;அதிகம் ஹைட்ரோ ஆலைகள் அமைக்கும் அளவுக்கு இல்லை என்வே நினைக்கிறேன்.

காற்றாலை அமைப்பதில் டெக்னிகல் அம்சங்கள் பார்க்க வேண்டியதிருக்கிறது என்பது ஒரு குறையா என்ன? அது தனியார் துறைக்கு வேண்டுமானால் பெரிய காரியமாக இருக்கலாம்.ஆனால் அரசுக்கு?எந்த பக்க விளைவுகளும் இல்லாமல் சக்தி உற்பத்தி செய்ய இயலும் போது முயற்சிக்கலாதானே?

மேலும் தாய்லாந்து போன்ற நாடுகளில் சிறு அளவில் காற்றாலை மின்சக்தி உற்பத்தி செய்ய மிகவும் ஊக்கப்படுத்துகிறார்கள்;சிறு சிறி நிறுவனங்கள் அதிகம் காற்றாலைகளை உப்யோகித்து தங்களுக்கு வேண்டிய மின்சக்தியை உற்பத்தி செய்து கொள்வதாக செய்தியில் பார்த்தேன்.

இவ்வகை முயற்சிகள் அதிகரிக்கும் போது பொது விநியோகத்திற்கான் மின்சக்தி பெருமளவு மிச்சப்படும் இல்லையா?இதை தொழிற்சாலைகளுக்குத் திருப்பி விடலாமே..அணுசக்திக்கழிவுகள் த்லைமுறைகள் தாண்டி வேத்னைப் படுத்தும் என்பதை நன்றாக அறிந்து கொண்டே ஏன அதில் விழ வேண்டும்?

அதற்கான கண்டுபிடிப்புகள் சில ஆண்டுகளில் வந்துவிடும் என்று நம்புவதால் அதில் இறங்க முடியாதே..

அமெரிக்கர்களைப் பொறுத்தவரை அவர்கள் தேசம் என்றால் அதற்கு தனி சட்டமும் கொள்கைகளும்,மற்ற உலக நாடுகளுக்கு தனி சட்டங்கள் கொள்கைகள் என்ற இரட்டை நிலைப்பாடு கொண்டவர்கள்;அவர்கள் சொல்கிறார்கள் என்பதால் அது நமக்கு நன்மை அளிக்கும் என நம்புவது அறியாமையே;நாம் ஆய்ந்து பார்த்து முடிவு செய்ய வேண்டும்.

நமது சிங்கோ பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு கூட வைக்க மாட்டேன் என்கிறாரே??????

"கற்புனா என்ன? : சில நினைவலைகள்(360 டிகிரி) - 3"

"கற்புனா என்ன? : சில நினைவலைகள்(360 டிகிரி) - 3"

கயல்..

முதலில் இந்தப் பதிவின் ஷாக் வால்யூ என்னை அதிர வைத்தது.என்னதான் தவறியிருப்பினும்,நம் நெருங்கிய சொந்தங்கள் என்னும் போது விதயங்களைச் சொல்ல சிறிது தயக்கம் இருக்கும்,அதனை மீறியும் உங்களது வலியை உணர முடிகிறது.

பல குடும்பங்களில் இந்த வித பிரச்னைகள் வேறுவேறு அளவில் இருக்கும் என்ற உண்மையும் ஏற்க வேண்டியதே.பெரும்பாலும் இந்த வித சம்பவங்கள் சம்பந்தப்பட்டவர்களின் மனமுதிர்ச்சியின்மையினால் விளைந்த செயல்களாகவே இருக்கும்.

உங்களது தாயின் மனநிலை அணுப்பிளவின் ஒத்தநிலையில் இருந்திருக்கும் எனச் சொல்ல வேண்டியதில்லை.ஆனால் ஒரு சாதாரண பெண்ணால்(இயல்பில் பெண்கள் நுண்ணியல்பு மிக்கவர்கள்) இதன் கூறுகளை வெகு முன்னர் கண்டறிந்து இந்த அதிர்ச்சி அளவுக்குப் போகாது தடுத்திருக்கலாம் என்றே நான் நினைக்கிறேன்.

காமம் மற்றும் தாம்பத்யம் இரண்டிலும் நுழையும் ஆணும் பெண்ணும் பெரும்பாலும் பல உருவகங்களுடனேயே இந்தியச் சூழலில் நுழைகிறார்கள் என்பதும் என் துணிபு.காமத்திலும்,தாம்பத்யத்திலும் வெளிப்படையான பார்வைகளும் அவதானிப்புகளும் இருக்கும் தம்பதிகள் பெரும்பாலும் இந்த அதிர்ச்சிகளிலிருந்து தப்பிக்கும் சாத்தியங்கள் அதிகம்..

இன்னொரு பார்வையான் கற்பு நிலை என்பது இந்திய சமூகத்தில் பெரும்பாலும் ஆணாதிக்கப் பார்வையுடனேயே அணுகப்பட்டிருக்கிறது என்பதை ஒரு ஆண் என்ற அளவில் வெட்கத்துடனேயே ஒப்புக்கொள்கிறேன்.

இப்போதிய மாறுபட்ட காலத்தில் யேசுநாதர் காலத்திய கற்பு வரையறைகள்(கற்பு நினைவின் பாற்பட்டது) சாத்தியமில்லை எனினும் நான் இதில் பாரதியின் கட்சி.

அழகாக அறிவித்தான் பாரதி,'கற்பு நிலையென்றொன்று கொண்டுவந்தால் அதை ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவில் வைப்போம்' என !நீ பரிசுத்தமான பெண்ணை எதிர்பார்த்தால்,நீ அவளுக்கு பரிசுத்தமான ஆண்மகனாக இரு என்பதே என் நிலை.இதுவே என் மனைவியிடமும் நானளித்த உறுதிமொழி.

இதில் மாறுபாடுகள் நிகழும் போது(இன்னும்) பெண்கள் ரிசீவிங் எண்ட்'லேயே இருக்கிறார்கள் எனபதற்கு உங்கள் பதிவே சாட்சி.

இந்த சம்பவத்தில் பால் மாறாட்டம் நடந்திருந்தால் எதிர்விணைகள் எப்படி மாறி இருக்கும் என்பதே என்முதல் எண்ணமாக இருந்தது,பதிவைப் படித்து முடித்தவுடன்.எனினும் அதை சுட்டுவது உங்களைக் காயப்படுத்தலாம் என் எண்ணிக் கொண்டே கமெண்டுகளைப் படிக்கையில் நீங்களே அதை சுட்டியிருக்கிறீர்கள்;ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை, hats off என்பதைத் தவிர.

மற்றபடி உங்கள் தாயின் ரியாக்‌ஷன் அவரின் மீதான் மதிப்பை கூட்டியது என்றே சொல்வேன்;தன்னிலையில் தெளிவான ஒரு பெண் இவ்விதமாகவே ரியாக்ட் செய்வாள் என்பது இயற்கையே.

அப்பர் சுவாமிகளின் திருமுறைப் பாடல்களிலே,திருப்பாணாள்வார் கதையில் இதைப் போன்ற ஒரு கட்டத்ததில் பாணரின் மனைவி அவரை ‘தீண்டுவீராயில் திருநீலகண்டம்' எனச் சொல்லி அவரைத் ‘தள்ளிவைத்த' கதைதான் நினைவுக்கு வருகிறது.

வளர்ந்த குழந்தைகள் இருக்கும் நிலையில்,இந்தியச் சூழலில் உங்கள் தாய் எடுத்த முடிவு சுயத்தை நிலைநாட்டியதுடன்,நடைமுறைச் சிக்கல்களையும் தவிர்த்த ஒன்று என்றுதான் சொல்லமுடியும்.

உங்கள் தாய் பார்க்காமல் இருந்திருந்தால் நன்றாக இருக்கும் என்ற ஜால்லியடிகளில் எனக்கு உடன்பாடு இல்லை;அந்த செயல் எவ்வளவு தூரம் நிதர்சனமோ அவ்வளவு தேவை,அதை உங்கள் தாய் அறிந்ததும்.பார்க்காவிட்டால்,தெரியாவிட்டால்,மாட்டிக்கொள்ளாவிட்டால் எந்த தவறும் தவறல்ல என்பது எனக்கு ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று.

I can just say Your father deserves his getting caught !

இந்த நிகழ்ச்சி அப்படியே பால் வேறுபட்ட நடந்த சூழல்களில் கூட,குழந்தைகளுக்காக இந்த வகையிலேயே(உங்கள் அம்மாவின் முடிவு போல) ரியாக்ட் செய்த ஆண்களும் ஆங்காங்கே கிடைப்பார்கள் என்றே நினைக்கிறேன்.

மற்றபடி உங்கள் துணிவுக்கும்,அலசல் மனதுக்கும் மறுபடி ஒரு பாராட்டு.

Saturday, July 5, 2008

"அறிவு ஜீவிகளே! அண்ணாந்து பார்த்துக்கொண்டு எச்சில் உமிழாதீர்கள்!"

"அறிவு ஜீவிகளே! அண்ணாந்து பார்த்துக்கொண்டு எச்சில் உமிழாதீர்கள்!"

கலாமின் நோக்கங்கள் மிக உயர்ந்தவை என்பதில் எந்த கருத்து வேறுபாடுகளும் இல்லை.

ஒரு நல்ல விஞ்ஞானியு அறிவியலாளரும் கூட.

ஆனால் தேச முதல் குடிமகனாக சில சமயம் சறுக்கினார்.(உறுப்பினர்கள் லாபம் தரும் பதவிகளில் அமரத் தடை மசோதா,356 மூலம் ஆட்சிக் கலைப்பு..)

அவரது 2020 திட்டமும் முழுக்க ஒரு டாக்குமெண்டரி போல இருக்கிறது;ஓரளவு வாசிப்பார்வம் இருக்கும் என் போன்றவர்களுக்கே இந்தியா 2020 நல்ல வாசிப்பை அளிக்கமுடியவில்லை.

விதயங்களை அறிந்து கொள்ளும் தாகம் இருப்பவர்களுக்கே அது விருப்ப வாசிப்பாக இல்லாத போது,ஆள்பவர்களோ,தலைவர்களோ அதன் அருகிலும் செல்வார்களா என்பது சந்தேகமே.

ஆளுமைப் பதவியில் அமருபவர்கள் நேர்மையாளர்களாக இருப்பது 50 களுக்குப் பிறகு இந்தியாவில் மறைந்துவிட்டது;அந்த மறைந்து போன rare species க்கு ஒரு காட்டாக விளங்கியதால்,இன்னமும் நாட்டின் மீது நம்பிக்கை கொண்ட(என்னைப் போன்ற) இளைஞர்கள் அவரை ஆவலுடன் பார்க்கிறார்கள்.அவரின் செயல்பாடு(முதல் குடிமகனாக) என்னையும் கவர வில்லை;அவர் இன்னும் வலிமையான தலைவராக தன்னை வெளிப்படுத்தியிருக்க வேண்டும் !

ஜோதிடம்: என்னதான் ரகசியமோ இதயத்திலே!

ஜோதிடம்: என்னதான் ரகசியமோ இதயத்திலே!

>>>////அறிவன்#11802717200764379909 said...நல்ல செய்திகள்..//ரிஷப ராசிக்காரர்க்ளுக்கு சனி யோககாரகன்.9 & 10ஆம் வீடுகளுக்கு உரியவன். //

இந்த மாதிரி இன்ன ராசிக்காரர்களுக்கு யார் யோக காரகன் அல்லது பாவி யார் என்பதை ஏதாவது பதிவில் சொல்லி இருக்கிறீர்களா?அது போல பாவத்திற்கான ராசிகள் என்ன என்று சொன்னாலும் நலம்,காட்டாக ஐந்தாம் வீடுக்கு காரகன் குரு என்பது போல்...////

அந்‍தப் பாடங்கள் எல்லாம் வரிசைப்படி வரும் நண்பரே! சற்றுப் பெரிய பாடம் அது!யோகங்கள் மொத்தம் 300 உள்ளன!கஜகேசரி யோகம், லக்ஷ்மி யோகம், சண்டாள யோகம், ஆதித்ய யோகம் இப்படியாக....!>>>>>

இல்லை,என் கேள்வி சரியாகப் புரியவில்லையோ என அஞ்சுகிறேன்.

ஒவ்வொரு ராசிக் காரனுக்கும்,லக்ன காரனுக்கும் சில கிரகங்கள் யோக காரகனாகவும் சில கிரகங்கள் பாவ காரகனாகவும் பொதுவாக வரையறுக்கப் பட்டிருக்கிறது என நினைக்கிறேன்.

காட்டாக மகர ராசி அன்பர்களுக்கு சுக்கிரனும் யோக காரகன்(என நினைக்கிறேன்) அது போல பாவிக் கிரகங்களும் வரையறுக்கப் படுகின்றன அல்லவா?அதையே நான் கேட்டேன்,பொதுவான(சசி மங்கள யோகம்) போன்ற யோக விபரங்கள் அல்ல.

இரண்டாவதாக பாவத்துக்குரிய நாயகர்கள்.காட்டாக ஐந்தாம்பாவக் காரகன் குரு என்பது போல..

இவை இரண்டையும் பற்றி சில பதிவுகளில் விளக்கி விட்டு,இந்தப் பதிவு போல(ஐந்தாம்) ஒவ்வொரு பாவ விளக்கப் பதிவுகள் போடும் போது அவை இன்னும் சுவாரசியமாகவும் நல்ல அலசலுக்கு வழி கோலும் விதயத்திலும் இருக்கும்..

பொதுவாக (சசிமங்கள,விபரீத ராஜயோகம் போன்ற) யோகங்கள் பற்றிய விளக்கப் பதிவுகள் இதற்கு அப்புறம் வரும்போது படிப்பவர்கள் ஒரு கோர்வையாக விதயங்களை உணர்வார்கள்.

முதலில் கட்டமைப்பு(பாவ விளக்கங்கள்)-இது ஏற்கனவே செய்து விட்டீர்கள்,அடுத்தது ஒவ்வொரு லக்ன,ராசிகளுக்கான யோககாரக,பாவிகள் விவரங்கள்,அடுத்து பாவங்களுக்கான fixed காரகர்கள்,அடுத்து பாவ அலசல்கள்,யோக அலசல்கள் வரும் போது பாடம் முழுமை பெறும் என்று நினைக்கிறேன்...

Monday, June 30, 2008

"வெள்ளைக்காரர்களை கண்டு நமக்கேன் தாழ்வு மனப்பான்மை?"

"வெள்ளைக்காரர்களை கண்டு நமக்கேன் தாழ்வு மனப்பான்மை?"

//மனிதர்களை மனிதர்களாக பார்க்காமல் அவர்களின் தோல் நிறம் கொண்டு மதிப்பு தரும் நிலை என்று மாறுமோ!//

இந்த அளவு நொந்துகொள்ளும் நிலை இப்போது இல்லையெனவே நினைக்கிறேன்.

அமெரிக்கர்களே ஒரு ஆப்பிரிக்கன் அமெரிக்கனை பிரசிடெண்ட்டாக ஏற்றுக் கொள்ள முன்வந்து விட்டார்கள்.

அங்கும் இங்கும் நிலவும்(இப்போதும்) வேறுபாடுகள் நம் தாழ்வு மனப்பான்மையினாலேயே வருபவை.ஆயினும் இந்த வேறுபாடுகள் சிங்கப்பூரில் சிங்கப்பூரர்களுக்கும் இந்தியர்களுக்கும் இடையே கூட நடைபெறுவது உண்டு.

என்னுடைய அலுவலக அனுபவத்திலேயே,இந்தியன்தானே என்ற எண்ணத்தில் சற்று கீழ்த்தரமாக நடத்திய என்னுடைய சீன மேலாளரை நான் அதைவிட கீழ்த்தரமாக எதிர்கொண்டேன்;அவன் என்னுடைய இந்திய ஏஜென்ஸி மேலளரிடம்,'அவன் வேலையில் மகா கெட்டிக்காரன்;ஆனால் மிகவும் அர்ரொகண்ட்'ஆன ஆள்' என்று ரிப்போர்ட் கொடுத்து என் ஒரு வருடத்திய சம்பள உயர்வில் கை வைத்தான்.

போடா ம** என்று சொல்லி விட்டு அடுத்த நிறுவனத்துக்குப் போன எனக்கு,அந்த நிறுவனத்தில் ஐரோப்பியர்களும்,அமெரிக்கர்களும் மிக்க மதிப்புடன்,சக வேலைக்காரன் மற்றும் திறமைசாலி என்ற நோக்கிலேயே பழகினார்கள்;சொல்லப்போனால் நல்ல மதிப்பளித்தார்கள்!

வெள்ளையர்கள் இப்போதைய காலகட்டத்தில் திறனையே பார்க்கிறார்கள்;நிறத்தை அல்ல.

நம்மவர்கள் திறனை மேம்படுத்திக் கொள்ளாமல்,நிறக் காரணங்கள் சொன்னால் அது பேதமையே.

Sunday, June 29, 2008

"பயணிகள் கவனிக்கவும் - பாலகுமாரன்"

"பயணிகள் கவனிக்கவும் - பாலகுமாரன்"

//பிரச்சனை இவை எல்லாம் பொதுபுத்தியில் கட்டமைக்கும் பெண் பிம்பம் மிக மிக ஆபத்தானது. பெண்கள் குறித்த ஒருவகை obsession தான் பாலாவின் எழுத்துக்கள்.மத்திய தரவர்க்க நிறைவேறா பாலிண்ப ஏக்கம். அது மிகவும் ஆபத்தான ஒரு கட்டமைப்பு. மோசமான உள்ளடக்கததைக் கொண்ட சிறந்த வடிவம் விஷம் தடவிய மிட்டாய் போன்றது. இவரது எழுத்துக்களும் அப்படித்தான். //

ஜமாலன்,well said.

என்னுடைய கருத்தும் அப்படியே..

ஒருமுறை இக்கருத்தைச-அவரின் ரசிகர்களின் வலைப்பூவில்-சொல்லப் போக பலத்த நிந்தனைகளை சந்திக்க நேர்ந்தது;என்னுடைய விளக்கத்தைக் கூட மட்டுறுத்த மறுத்து ரசிகர்கள் கும்மியடித்தார்கள்..

ஆனால் பாலகுமாரனைப் பற்றிய மிகச் சரியான ஒரு மதிப்பீடு நீங்கள் சொன்னதுதான்.

மோகந்தாஸ் சொன்னமாதிரி,ஆரம்பத்தில் மிகக் கீழான நிலைக்கு இறங்கிவிட்டதால் மிக மேல்நிலையை உருவகப்படுத்தும் செயலைச் செய்கிறார் என்று சொல்வதும் சிந்தனைக்கு சரியானதாகவே தோன்றுகிறது.

Monday, June 23, 2008

"உலகநாயகன் குறித்த சில சிறப்புத் தகவல்கள்!"

"உலகநாயகன் குறித்த சில சிறப்புத் தகவல்கள்!"

//நடிகர் திலகமா..கமலா நடிப்பில் சிறந்தவர் யார்?என்னைபொருத்தவரை நியாயத்தராசில் கமிலின் தட்டு சற்று கீழ் இறங்கியுள்ளது.//

நடிப்பில் சிவாஜி சிறந்தவராகவே இருந்தாலும் அவர் காலத்திய இயக்குநர்கள் உடல் மொழியை வெளிக்காட்டக் கூடிய,பார்வை ஊடகத்தின் வழியே கதை சொல்லும் பாங்கான சினிமாவை வளர்க்காத காரணத்தால்,அவரால் திரைப் படங்களிலும் ஒரு தேர்ந்த நாடக நடிகராகத்தான் வெளிப்பட முடிந்தது.விதிவிலக்காக சில படங்களில் மட்டுமே காட்சிப்படுத்துகை சார்ந்ததான உடல் மொழி நடிப்பில் அவர் தேர்ச்சியைக் காட்ட முடிந்தது.

ஆனால் கமலஹாசன் தன்னுடைய இயல்பான உலகசினிமாவை நோக்கிய ஆர்வத்தால் இந்திய சினிமா தாண்டிய பார்வையைக் கொண்டிருந்ததால்,இரைச்சலான நாடகபாணி நடிப்பை எவ்வித வழிகளால் மேம்படுத்த முடியும் என்று சிந்தித்து நடிப்பில் பல புதிய பரிமாணங்களைக் கொண்டுவந்தவர்;அந்த நோக்கில் சிவாஜியிடமிருந்தே தேவர் மகனில் சிறந்த,உடல் மொழி சார்ந்த,அற்புதமான underplay நடிப்பைக் கொண்டுவந்தவர் என்ற வகையில் இன்றளவும் வியக்க வைப்பவர்.

அவரிடம் அத்தகு திறமை இருக்கிறது என்பதை 70 களிலேயே இனம் கண்டவர் சுஜாதா.இந்த இளைஞர்(கமலுக்கு 23 வயதிருக்கும் போது)எதிர்கால தமிழ்சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத நபராக இருப்பார் என்று க.க.பக்கத்தில் முன்னுரைத்தவர் அவர்.

இத்தகு அற்புதத் திறமைசாலியே,புணர்வைக் குறிக்கும் இடுப்பசைவை நடனக் காட்சிகளில் தமிழ் சினிமாவில் புகுத்தியவர் போன்ற விதயங்கள் கூடவே நினைவில் வருவதும் தான் விசனிக்க வைப்பன;அதற்கு முன்பு எந்த தமிழ் நடிகரும் அவ்வித அசைவுகளை தமிழ் சினிமாவில் காட்டியதில்லை(என்றே நினைக்கிறேன்).

Tuesday, June 17, 2008

"வலைப்பதிவவர்களுக்கு கமல்ஹாசனின் கோரிக்கை!"

"வலைப்பதிவவர்களுக்கு கமல்ஹாசனின் கோரிக்கை!"

நண்பா கௌதமா,இந்த 'ஒட்டு வெட்டிப்' பதிவை இப்போது நீ போட்டதால்தான் அதில் அரசியல் இருக்கிறது என்று உண்மையார் பொங்கி விட்டார்.

மற்றபடி நல்ல கும்மி....

ஆனாலும் ஆதாரமான ஒரு விதயத்தைச் சுட்ட விரும்புகிறேன்.

எந்த விதயத்தையும் விமர்சிப்பவனுக்கு அந்த விதயத்தில் ஈடுபாடு,விருப்பு-interest- இருந்தாலே போதும்;விமர்சிக்கலாம்.இதற்கு அந்த விதயத்தைப் பற்றி 'எல்லாம்' தெரிந்தவர்கள்தான் வர வேண்டும் எனச் சொல்வது கலைக்கு ஒத்துவராத ஒரு விதயம்.

ஒரு சினிமா விமர்சிக்கப் படும் போது ,'எங்கே நீ வந்து எடுத்துப் பாரு பார்ப்போம்' என பதில் சொல்வது,முதல்வனில்,'எங்கே நீ வந்து ஒருநாள் முதல்வரா இரு பார்ப்போம்' எனச் சொல்லும் பேதமை.

இரண்டாவது,விமர்சனம் நன்றாக இருந்தால் அதை ஏற்றுக் கொள்வதும்,நல்ல விதமாக இல்லையென்றால் விமர்சிப்பவனை விமர்சிப்பதும்,கலை அல்ல;முழுக்க அரசியல் !மணி(ரத்னம்) ஒருமுறை அழகாகச் சொன்னார்,படம் மிக மோசமாக விமர்சிக்கப் படுகிறது என்றால்,நமது பெர்ஸப்ஷனுக்கும்,பார்வையாளரின் பெர்ஸப்ஷனுக்கும் வேறுபாடு இருக்கிறது என்று ஏற்றுக் கொண்டு அடுத்த வேலையைப் பார்க்க வேண்டியதுதான்.நாம் எடுத்த படங்கள் நன்றாக இருக்கிறது என அதே ரசிகர்கள்தானே தூக்கிவைத்துக் கொண்டாடினார்கள்,தூக்கிக் கீழே போடும் போதும் ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான் !' என்று.எனவே உண்மை'யின் வார்த்தைகள் நான் முழுதுமாக ஏற்கிறேன்,இன்னும் படம் பார்க்காவிட்டாலும் !(நீதான் சிங்கப்பூருக்கெல்லாம் டிக்கெட் தரமாட்டேன்னு சொல்லிட்டியே!)

மூன்றாவது பதி(வர்)வுகள் பற்றிய பார்வை.பெரும்பான்மையான கும்மியாளர்கள் இருப்பினும்,சில கூர்மையான அவதானிப்புகளும்,பார்வைகளும் இங்குதான் காணக் கிடைக்கும்;அவை வணிகக்காரணங்களுக்குள் சிக்கியிருக்கும் பத்திரிகையில் கிடைக்காது;அவர்களுக்கு பல நிர்ப்பந்தங்கள் நடைமுறை உலகில்-practical-இருக்கின்றன.எனவே பதிவர்கள் பார்வை பலநேரம் நேர்மையாகவும்,கூர்மையாகவும் இருக்கும்,நான்காவதாக சொல்லப்ப்டும் வகையினரைத் தவிர!

நான்காவதாக,பதிவுலகில் இருக்கும் சில குழுக்களின் ‘கட்டமைப்பு உருவாக்கம்'.இவர்கள் தங்கள் கட்டமைப்பு சித்தாந்தங்கள்,அல்லது சித்தாந்தத் தலைவர்கள் கூறுவதே முடிவு என்று இருப்பவர்கள்;திராவிடக் கட்சிகள் குழு,பிராமணர் குழு,ஈ.வே.ரா பெரியார் குழு எனப் பல...இவர்கள் கருணாநிதியோ,பெரியாரோ,சோ'வோ அல்லது ஷகீலாவோ சொல்வதே வேதம் என்று வாதிடும் வெற்று மண்டையாளர்கள்;அவர்களிடமிருந்து எந்த நேர்மையான கருத்தும் கிடைப்பது துர்பலம் !

எனவே..கருத்து சுதந்திரம் கிறுக்குத்தனமோ,குரங்குத்தனமோ அல்ல!அது பதிவுலகின் ஆரோக்கியம்.

டிஸ்கி:நானும் கமலஹாசனின் படங்களை விரும்பிப் பார்ப்பவனே;ஆயினும் இந்த விதயத்தை ஒரு விமர்சகனின் உரிமைகள் என்ற வகையிலேயே அணுகியிருக்கிறேன்.படம் பார்த்தபின் என் உண்மையான கருத்து வரும் !

டிஸ்கி 2:நீண்ட பின்னூட்டத்துக்கு மன்னிக்கவும்,மற்றபடி நான் உண்மை'க்குப் போட்டி அல்ல !

Monday, June 16, 2008

பொன்னியின் செல்வன்.... தசாவதாரம்

பொன்னியின் செல்வன்.... தசாவதாரம்

அறிவன்#11802717200764379909 எப்படித் தாக்கியிருக்காங்கன்னா...
//வீரபாண்டியன் நந்தினியின் காதலனா? தந்தையா? எனற கேள்வியை வாசகர்களிடம் எழுப்பிவிட்டு அதற்கு விடையைத் தெரிவிக்காமலேயே கதையை முடித்துவிட்டார். //

நீங்கள் இன்னும் தெளிவாகப் படிக்கவில்லை போலிருக்கிறது.

பழுவேட்டரையர் மூலம் தெளிவாகவே குறிப்பிடுகிறார்,நந்தினி வீரபாண்டியன் மகள் என்று.இதை ஆழ்வார்க்கடியானும் உறுதி -கருத்திருமன் மூலம்-செய்வான்....

இணையத்தில் பொன்னியின் செல்வன் டாக்டரேட்ஸ் கொஞ்சம் பேர் இருக்காங்க...

:-)
*********************************************************

ஜி எப்படித் தாக்கியிருக்காங்கன்னா...
அறிவன்#11802717200764379909//நீங்கள் இன்னும் தெளிவாகப் படிக்கவில்லை போலிருக்கிறது.//:))

நானும் வீரபாண்டியன் நந்தினியின் தந்தை என்பதை உறுதிபடுத்தி விட்டார் என்றே நினைத்தேன்.

ஆனால் ஐந்தாம் பாகம் தொண்ணூறாம் அத்தியாயத்தில் வந்தியதேவனும் குந்தவையும் பேசும் ஒரு உரையாடலில் தாந்தான் நந்தினியின் தந்தை என்று பைத்தியக்காரன் சொன்னதாக வரும்.

மேலதிக விவரங்களுக்கு...http://www.ponniyinselvan.in/novel-characters-f7/nandhini-t15584.html?sd=d
**************************************

அறிவன்#11802717200764379909 எப்படித் தாக்கியிருக்காங்கன்னா...
//ஜி எப்படித் தாக்கியிருக்காங்கன்னா... அறிவன்#11802717200764379909//நீங்கள் இன்னும் தெளிவாகப் படிக்கவில்லை போலிருக்கிறது.//:)) நானும் வீரபாண்டியன் நந்தினியின் தந்தை என்பதை உறுதிபடுத்தி விட்டார் என்றே நினைத்தேன். ஆனால் ஐந்தாம் பாகம் தொண்ணூறாம் அத்தியாயத்தில் வந்தியதேவனும் குந்தவையும் பேசும் ஒரு உரையாடலில் தாந்தான் நந்தினியின் தந்தை என்று பைத்தியக்காரன் சொன்னதாக வரும்.மேலதிக விவரங்களுக்கு...http://www.ponniyinselvan.in/novel-characters-f7/nandhini-t15584.html?sd=d////

இல்லை !

இதை ஆழ்வார்க்கடியானே உறுதி செய்வான்.

பைத்தியக்காரன் - வந்தியத்தேவன் உதவியால் பாதாளச்சிறையிலிருந்து தப்பித்து ஓடும் போது ஆழ்வானிடம் படகில் மாட்டுவான்;அப்போதும் கருத்திருமன் முதலில்,தான் தான் அந்த இரு குழந்தைகளின் தகப்பன் எனக் கூறுவான்;பின்னர் ஆழ்வான் ‘நெஞ்சை ஒரு அமுக்கு அமுக்கிக்' கேட்டவுடன்,இல்லை அந்த இரு குழந்தைகளும் என் எஜமானரின் குழந்தைகள்(வீரபாண்டியன்) என்பான்;புதைக்கப் பட இருந்த அவற்றை காப்பாற்றியது தான் தான் என்றும்,அதற்காகவாவது உயிருடன் விட்டு விடும் படியும் கேட்பான்;ஆழ்வான்,'உண்மையில் அதற்காகத்தான் விடுகிறேன்' பிழைத்துப் போ' என்று விடுவான்.

பின்னர் கதையில் நந்தினி கரிகாலரிடம் உண்மையைச் சொன்ன கணத்தில் பழுவேட்டரையர் மறைந்து கேட்பார்.

இத்தகவல் நந்தினியால் நேரடியாக அவருக்குக் குகையில் உறுதி செய்யப் படும்.அதை பழுவேட்டரையர் அரசசபையில் தான் தற்கொலை செய்யும் முன்னர் பகிரங்கமாகத் தெரிவிப்பார்....

Wednesday, June 11, 2008

சங்கர்லாலும் வந்தியத்தேவனும் பிராண்டுகளாவார்களா?

சங்கர்லாலும் வந்தியத்தேவனும் பிராண்டுகளாவார்களா?

வித்தியாசமான தளப்பதிவு.

//சுஜாதா கணேஷ் வசந்த் பிரச்சனையை அழகாக சமாளித்தார்.கணேஷ் வசந்தை செமி வில்லனாக காட்டிவிட்டார்.//

இது ஒரு காரணமா என்ன?

வசந்த்'ஐ வேண்டுமானால் அந்த குறும்புக்காக செமி வில்லன்' என சொல்வதை ஏற்றுக் கொள்ளலாம்,ஆனால் கணேஷை எப்படி அப்படி சொல்வீர்கள்?

என்னைக் கேட்டால் கணேஷ் சுஜாதா'வின் ஆதர்ச நாயகன் வடிவம்;வசந்த் அவருக்குள்ளிருந்த விளையாட்டுப் பிள்ளை வடிவம்.யோசித்துப் பார்த்தால் நம் அனைவருக்குள்ளுமே இவ்வித இரு விதமான(சிலருக்கு பல விதமான) குணாதிசயங்கள் இருக்கின்றன.

அவர்கள் இருவரின் கதாபாத்திரம் உயிர்ப்புடன் கடைசிவரை இருந்ததற்கான-சொல்லப்போனால் இன்னும் இருப்பதற்கான- காரணம் சுஜாதாவின் அகன்ற வாசிப்பு,அதனால் பரிமளித்த அவரின் அகடமிக் இண்டலிஜன்ஸ் அந்த கதாபத்திரங்களிலும் பிரதிபலித்ததே.

அப்ஸ்ட்ராட்டாக சொன்னால்,அனிதா இளம் மனைவியிலோ,நைலான் கயிறிலோ வரும் கணேஷ்,பிற்காலக் கதைகளின் வசந்த் போலதான் பிஹேவ் செய்வான்.ஆனால் யவனிகாவின் கணேஷ் சொல்லமுடியாத அளவில் முதிர்ச்சியைக் காண்பிப்பான்.

போகப் போக சுஜாதாவின் வாசிப்புகளின் பிரதிபலிப்புகள் அந்த பாத்திரங்களில் இருந்ததுதான் அவற்றின் என்றுமான வெற்றிக்கான காரணம்;அவரின் வாசிப்பு என்றுமே-கடைசிவரை- உயிர்ப்புடன் இருந்தது !

Sunday, June 8, 2008

சிவலிங்கம் ச்சே "அதை"யா குறிக்கிறது?

சிவலிங்கம் ச்சே "அதை"யா குறிக்கிறது?
நண்பர் ரவி,நல்ல விளக்கப் பதிவு.இன்னும் சில செய்திகள் லிங்க வடிவம் பற்றி இருக்கின்றன;உடனடியாகத் தர முடியவில்லை;சிறிது பொறுத்துத் தருகிறேன்.

சிவன் எக்காலத்தவன் என்பது பற்றிய சில விவாதங்களும் படித்தேன்.நமக்குக் கிடைத்துள்ள தமிழ் நூல்கள் யாவுமே கடைச்சங்க காலத்திய நூல்களே,சங்க இலக்கியங்கள் உட்பட.விதிவிலக்கான ஒரே நூல் தொல்காப்பியம்,அது சிறிதே காலத்தில் முந்தையதாக இருக்க வாய்ப்பிருப்பதாகக் கணிக்கிறார்கள்.

அந்நாட்களின் இந்தியாவின் கீழ்ப்பகுதி மிகவும் பரந்தி விரிந்து கீழ் இடது புறமாக ஆப்பிரிக்கா கண்டத்தின் சில பகுதிகள் வரை கூட இருந்திருக்கலாம் என சில ஆய்வுகள் சொல்கின்றன.அப்பகுதியின் கபாடபுரம் இடைச்சங்க காலத்தின் பெருநகராக இருந்திருக்கிறது.

இந்த தென்னகப் பகுதி மிகு உயர் நிலையில் இருந்ததால் 'தென்னாடு' எனவே அழைக்கப்பட்டிருக்கலாம்.சிவதத்துவம் உறுதியாக இருந்திருக்க வேண்டும்.இல்லாவிடில் தென்னாடுடைய சிவனே போற்றி என்ற வலுவான கோஷம் எழ வாய்ப்பில்லை.

ஆனால் சமஸ்கிருத மொழியில் அமைந்த வேதங்களிலும் 'சிவ' என்ற வார்த்தை குறிப்பு இல்லையெனவே பலரும் எடுத்துக் காட்டுகிறார்கள்;மாறாக ருத்ர என்ற சொல்லே,தேவதையே வழங்கப் பட்டிருக்கிறது.மாறாக பிரம்மம் என்ற உயர்தத்துவம் வடமொழி வேதங்களால் முன்னிறுத்தப்படுகிறது.இந்த பிரம்மம் என்ற சொல்லின் குறியீடாக வேதங்களும்,பிரம்ம சூத்ரமும் சொல்லும் பொருள்,தமிழில் சிவம் என்ற சொல்லால் ஆளப்படுகிறது.

இந்த பொருள்விரிப்பு சைவ சித்தாந்தத்தில் வருகிறது.அங்கு இறைத்தத்துவம் சிவம்,மாகேசுவரன்,பிரம்மா,விஷ்ணு,ருத்ரன் என்ற வரிசையில் விளக்கப்படுகிறது.

எனவே சிந்துவெளிக்கெல்லாம் முன்பே சிவ வழிபாடு,சிவதத்துவம் தென்னாட்டில் இருந்திருக்க வேண்டும் என்றே கருத வேண்டியிருக்கிறது.துரதிருஷ்டவசமாக க்டல்கொண்ட கபாடபுரப் பேரழிவில் நூல்கள்,தத்துவம்,மக்கள் என அனைத்தும் அழிந்து போயிருக்கலாம்;பின்னர் தோன்றிய தென்னாட்டு உயிர்களின் வழிபாட்டுமுறை தத்துவம் சார்ந்ததாக இல்லாமல்,இயற்கை சார்ந்ததாக நால்வகை நிலம் சார்ந்ததாக,அந்நிலவகை காப்பாளர்கள் தம்மைக் காத்து அருளவேண்டும் என்ற livelyhood சார்ந்ததாக மாறியதால் சிறுகடவுளர் வழிபாடு பெருகி இருக்க வேண்டும்.

தற்போது இந்த விதயங்களை இணைக்கும் ஓரே நூலாக அறியக் கிடைப்பது திருமந்திரம் மட்டுமே.அதுவும் கடல்கோள்/ஆக்கிரமிப்பாளர் வழி அழிவுக்கு முன்னர் 8000 பாடல்கள் வரை இருந்ததாகவும் அழிவின்பின் எஞ்சியவை 3000 பாடல்களே எனவும் சில நூலோர் கூற்று.

மேலதிகத் தகவல்கள் தேடுகிறேன்;கிடைப்பின் பகிர்வேன்.

***********************************************************************

@அறிவன்

//நமக்குக் கிடைத்துள்ள தமிழ் நூல்கள் யாவுமே கடைச்சங்க காலத்திய நூல்களே,சங்க இலக்கியங்கள் உட்பட.விதிவிலக்கான ஒரே நூல் தொல்காப்பியம்//

கால வரையறையின் படி இது சரியே!

//சிவதத்துவம் உறுதியாக இருந்திருக்க வேண்டும்.இல்லாவிடில் தென்னாடுடைய சிவனே போற்றி என்ற வலுவான கோஷம் எழ வாய்ப்பில்லை//

இந்த தென்னாடுடைய சிவனே கோஷம் எங்கு முதலில் வருகிறது அறிவன்? எந்த இலக்கியத்தில் அறிகிறோம்?

இல்லை செவி வழி வழக்கு தானா?

//ஆனால் சமஸ்கிருத மொழியில் அமைந்த வேதங்களிலும் 'சிவ' என்ற வார்த்தை குறிப்பு இல்லையெனவே பலரும் எடுத்துக் காட்டுகிறார்கள்;மாறாக ருத்ர என்ற சொல்லே,தேவதையே வழங்கப் பட்டிருக்கிறது//

ருத்ரன் என்பது வேத காலக் கடவுள். பின்னரே சிவம் என்ற வழங்கப் பெறுகிறார்.மெளலி அண்ணா/திவா சார் - இது சரியா? ரிக் வேத சாகைகளில் சிவன் என்ற சொல் இல்லையா?

//இந்த பொருள்விரிப்பு சைவ சித்தாந்தத்தில் வருகிறது.அங்கு இறைத்தத்துவம் சிவம்,மாகேசுவரன்,பிரம்மா,விஷ்ணு,ருத்ரன் என்ற வரிசையில் விளக்கப்படுகிறது//

சைவ சித்தாந்தம் என்பது இடைச்சங்க காலத்தில் இருந்ததாஇல்லைசிவம் என்பது மட்டும் கபாடபுர வழக்கில் இருந்து, பின்னர் இடை/கடைச் சங்க காலத்தில் பிறவா யாக்கைப் பெரியோன் என்று தலை தூக்கி, அதன் பின்னர் சைவ சித்தாந்தம் என்று நிலை பெற்றதா?

//துரதிருஷ்டவசமாக க்டல்கொண்ட கபாடபுரப் பேரழிவில் நூல்கள்,தத்துவம்,மக்கள் என அனைத்தும் அழிந்து போயிருக்கலாம்;//

சிவம் என்பது மட்டும் கடற் கோளுக்கு முன்னரே, தொல்காப்பியத்துக்கு முன்னரே, சிவ தத்துவமாய் இருந்தது என்று சொல்கிறீர்கள்! நூல்கள், மக்கள் என்று அத்தனையும் அழிந்து போயினவே! அப்புறம் சிவம் என்ற இறையும் தத்துவமும் கபாடபுரத்தில் இருந்தது என்பதை மட்டும் எதைக் கொண்டு அறிகிறோம்?

//பின்னர் தோன்றிய தென்னாட்டு உயிர்களின் வழிபாட்டுமுறை தத்துவம் சார்ந்ததாக இல்லாமல்,இயற்கை சார்ந்ததாக நால்வகை நிலம் சார்ந்ததாக//

1. ஆக தொல்காப்பியருக்கு முன்னரே சிவன் தென்னாட்டில் இருந்தார்.2. கடற் கோளில் காணாமல் போனார்.3. பின்னர் வந்த நாகரிகத்தில் மாயோனும் சேயோனும் தோன்றினார்கள். 4. ஆனால் அப்போதும் சிவன் காணாமல் போன நிலையிலேயே இருந்தார்.5. தொல்காப்பியருக்குப் பின்னர் மீண்டும் "எப்படியோ" காணாமல் போயிருந்த சிவன் சிலப்பதிகாரம் முதற்கொண்டு தலை தூக்க ஆரம்பித்தார்.

நல்ல கோர்வையான சிந்தனையாகத் தான் இருக்கு!ஆனால் இதற்கு ஏதேனும் ஒரு சான்று, தரவு ஆவது தர வேண்டுமே! எதைக் கொண்டு இப்படி ஒரு கோர்வைக்கு வந்தோம்?

1இவ்வளவு Chronology கடற்கோளுக்கு முந்தைய சிவனைப் பற்றி அறிய முடிகிறது என்றால், எதை வைத்து அறிந்தோம்? நூலா, இலக்கியமா, புதை பொருளா? எது? - இதற்கு விளக்கம் தேவை?

2கடற்கோளில் காணாமல் போன சிவன், மாயோன்/சேயோனுக்குப் பின் எப்படி மீண்டும் வந்தார்?

இதற்கெல்லாம் விடை தேடுதல், தமிழில் இறையின் தொன்மத்தை அறிய உதவும்!

தொன்மம் அறிவது ஒவ்வொரு கலாச்சாரத்தின் சிறப்பு.பக்தி மார்க்கத்துக்குத் தொன்மம் தேவை இல்லை! சிவபெருமானை வணங்கி மகிழ்ந்து உய்வு பெறுவது அது!

இது ஒரு ஆன்மீகப் பாதை என்றால் அது ஒரு வரலாற்றுப் பாதை!

இரண்டையும் அன்பர்கள் குழப்பிக் கொண்டு பயனற்ற கும்மியில் இறங்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

//தற்போது இந்த விதயங்களை இணைக்கும் ஓரே நூலாக அறியக் கிடைப்பது திருமந்திரம் மட்டுமே//

திருமந்திர நூல் பக்தி இலக்கிய கால கட்டம் இல்லையா?தொல்காப்பியத்துக்கும் முந்தியது என்றா சொல்கிறீர்கள்?

திருமூலர், மூல நாயனார் என்று சொல்வது எல்லாம் பக்தி இலக்கிய கால கட்டம் இல்லையா?

எதற்கும் சரி பார்த்துக் கொள்ளுங்கள்!

மற்றபடி உங்கள் கருத்துக்களும் வாதங்களும் சூப்பர் அறிவன்!

நல்ல தகவல்கள்!

சைவக் கொடி பிடிப்பதாக நினைத்துக் கொண்டு கும்மி மட்டுமே அடிப்பதைக் காட்டிலும், தங்களைப் போன்றவர்கள் செய்வதே சிறந்த சிவத்தொண்டு!

மேன்மை கொள் சைவ நெறி மேதினியில் தழைக்கட்டும்!ஓம் நம சிவாய!

***********************************************************************

///1. ஆக தொல்காப்பியருக்கு முன்னரே சிவன் தென்னாட்டில் இருந்தார்.2. கடற் கோளில் காணாமல் போனார்.3. பின்னர் வந்த நாகரிகத்தில் மாயோனும் சேயோனும் தோன்றினார்கள். 4. ஆனால் அப்போதும் சிவன் காணாமல் போன நிலையிலேயே இருந்தார்.5. தொல்காப்பியருக்குப் பின்னர் மீண்டும் "எப்படியோ" காணாமல் போயிருந்த சிவன் சிலப்பதிகாரம் முதற்கொண்டு தலை தூக்க ஆரம்பித்தார்.////

அன்பு ரவி, Point no.4 நான் சொன்ன விதயத்தில் இல்லை.நான் சொல்ல வந்தது சிறு தெய்வ வழிபாடு எப்படி பரவலான ஆக்கம் பெற்றது என்பதைக் குறிக்க..சிவதத்துவம் ஒரேயடியாக மறைந்திருக்காது.

பதிவுலகில் பரவலாக அறியப்படும் ‘திராவிடத்'துக்கிடடையே அவ்வப்போது மின்னி மறையும் ‘மாதவித்' தெய்வம் போல மிகச் சிலருக்கான வட்டத்தில் இருந்திருக்கலாம்.

:-)

ஆயினும் உங்கள் வினா நல்ல ஆய்வுக்குரிய ஒன்று,விடை(அல்லது விடை நோக்கிய தேடல்)கூடிய விரைவில் !

/////திருமந்திர நூல் பக்தி இலக்கிய கால கட்டம் இல்லையா?தொல்காப்பியத்துக்கும் முந்தியது என்றா சொல்கிறீர்கள்?

திருமூலர், மூல நாயனார் என்று சொல்வது எல்லாம் பக்தி இலக்கிய கால கட்டம் இல்லையா?

எதற்கும் சரி பார்த்துக் கொள்ளுங்கள்!

மற்றபடி உங்கள் கருத்துக்களும் வாதங்களும் சூப்பர் அறிவன்!

நல்ல தகவல்கள்!/////

இவை பற்றியும் சரியான விதயங்களுடம் மீள்கிறேன்.

என் சிற்றறிவு கருவிலே அமைந்த திருவாக என் அன்னையின் வாசனையில் வந்தது.

அவர் உண்மையான 'படிப்பாளி'.

சிறிது கடன் வாங்கி விரைவில் வருகிறேன்.

பாராட்டுக்கு நன்றி,கீதா மற்றும் ரவிக்கு.

"* லஞ்சம் சரணம் கச்சாமி *"

"* லஞ்சம் சரணம் கச்சாமி *"

சுந்தர்,அழகாக(!) எழுதப்பட்ட வலி இருக்கிறது உங்கள் வரிகளில்.இந்த கோபம் எனக்கும் பல சமயங்களில் ஏற்பட்டிருக்கிறது.

ஆனால் இதற்கான தீர்வுகள் Bottom Up approach ஆக இருப்பதை விட(கிரி'யின் மனசாட்சி-காவலர் தொப்பை பதிவில் இந்த சுட்டி எதைக் குறிக்கிறது என வியக்கிறேன்-அல்லது சுட்டி மாறிவிட்டதா??) top down approach ஆக இருக்க வேண்டும்,அதுவே தீர்வுகளைத் தரமுடியும் என்று நினைக்கிறேன்,நம்புகிறேன்.

"காவலர் பதவியில் சேரும் முன்பு சேர்ந்த பின்பு :-)"

"காவலர் பதவியில் சேரும் முன்பு சேர்ந்த பின்பு :-)"

கிரி,நல்ல ஒரு topic ஐ தொட்டிருக்கிறீர்கள்.காவலர்களுக்கும் ஏன் காவல்துறை அதிகாரிகளுக்குமான முதல் தகுதி உடல் தகுதி.இது ராணுவத்தில் களப்பணியில் இருப்பவர்கள் எப்படி உச்சபட்ச உடல்தகுதியுடன் இருக்க வைக்க முயற்சி செய்ய தூண்டப்படுகிறார்களோ,அதே போல் காவல் துறையும் களப்பணி சேர்ந்ததே என்ற நிலையில்,நீங்கள் சொல்லும் கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததும்,கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய ஒன்றுமாகும்.எனக்குத் தெரிந்த வரை சுமார் 15 வருடங்களுக்கு முன்வரை எங்கள் ஊர் காவல் நிலையத்தில் கூட நிலையத்தை ஒட்டிய மைதானத்தில் பயிற்சி மற்றும் விளையாட்டுகளில்-பெரும்பாலும் வாலி பால்- விளையாடுவதைப் பார்த்திருக்கிறேன்.

இப்போது அவர்களுக்கு அதற்கெல்லாம் நேரமில்லை போலிருக்கிறது.

ஆனால் சுந்தர் கூறியது-அவர்களின் சேவை பாராட்டப்பட வேண்டும் என்ற கூற்று,பதிவின் பொதுப் பொருளான அந்தந்த வேலையாளர்கள் அந்தந்த தகுதியைக் கொண்டிருக்க வேண்டும்-என்ற கருத்து சிறிது மன நெகிழ்வு சார்ந்த நிகழ்வுகள் சித்தரிப்புகளில் நீர்த்துவிட்டது என்றே நினைக்கிறேன்.

ஆனால் சுந்தர் அவர்களின் பதிவையும்,பின்னூட்டங்களையும் படித்தேன்;அவர் சொல்லும் தீர்வு ஒரு நிறுவனங்கள் போன்ற கட்டமைப்பில் effective ஆக உபயோகம் ஆகலாம்,ஆனால் ஒரு நாட்டின் நிர்வாக முறைக்கு அதனிலும் மேலான சில விதயங்கள் தேவை என்றே தோன்றுகிறது,அவரின் கருத்து முற்றிலும் பாராட்டப்பட வேண்டியதே என்ற போதிலும் !

Sunday, May 25, 2008

"என் மகன்"

"என் மகன்"

ஐயா கண்ணன் அவர்களுக்கு,

மகன் தந்தைக்காற்றும் உதவியை அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.

அன்பும் வாழ்த்தும்.

ஒரு சிறிய விண்ணப்பம்:இலக்கியங்களை,திறனாய்வுகளை இணையத்தில் எழுத்து வடிவிலோ,ஒலி வடிவிலோ தந்தால் உங்கள் வலைமனை டி.கே.சி.யுடையதைப் போல ஒரு இணைய வட்டத்தொட்டியாக மாறும் வாய்ப்பிருக்கிறது.

அதை ஆர்வமுடன் நானும் எதிர்பார்க்கிறேன்.

கவிதைகள் மட்டுமே தந்தால் உங்கள் பக்கத்திற்கான படிப்பவர் ஆர்வம் நாளடைவில் குறைய வாய்ப்பிருக்கிறது.தவறாக எண்ண மாட்டீர்கள் என எண்ணுகிறேன்.

Sunday, May 11, 2008

மந்திரம் போலொரு சொல் தாரீர்!

மந்திரம் போலொரு சொல் தாரீர்!

/////இவைகளை வேண்டுமென்றே தவிர்த்திருக்கிறேன். நாம் மாற வேண்டும். எதைப் பற்றி நாம் அதிகம் நினைத்துக் கொண்டிருக்கிறோமோ பின் அதுவாகவே மாறிவிடுகிறோம். பிரிவினை பற்றிப் பேசும் மனது அழுக்குறுகிறது. பின் அது அழுக்காகவே இருக்கிறது. வன்முறை பற்றிப் பேசும் மனது மிரண்டு போய் கிடக்கிறது. வன்முறை என்றும் பிரச்சனையைத் தீர்த்ததாகக் கதை இல்லை. வன்முறை, வன்முறையை வளர்க்கும் என்பதே நிதர்சனம். எனவே தமிழ் மின்னுலகம் தன் 'விலங்கு மனத்தை'க் கொஞ்சம் திருத்தி நல்வழிப்படுத்திக் கொள்ள வேண்டும். இதுவொரு நல்ல வாய்ப்பு. வலைப்பதிவு என்பது யோகமென்று சொன்னீர்கள். அதுதான் எவ்வளவு உண்மை! எழுத்தை யோகமாகக் கொள்ளுங்கள். மந்திரம் போலொரு சொல் விழ வேண்டுமெனில்? உள்ளத்தில் ஒளி தோன்ற வேண்டும். உள்ளத்தில் ஒளி தோன்றினால் வாக்கினில் இனிமை வரும், சொல்லில் கனிவு வரும். அப்போது விழும் சொற்கள் மந்திரத்தன்மையுடன் இருக்கும்.//////

அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

எனது உள்ள ஆயாசமும் இதுவே.

தற்போது வலைப்பூக்கள் உலகு நீங்கள் சொல்லிய வண்ணமே உள்ளது.எனினும் கலங்குவது தெளிவு பெறவே என்பது பலநாள் நம்பிக்கை.

நம்புவோம்.....

வா மீத முலை எறி நூலிலிருந்து..

வா மீத முலை எறி நூலிலிருந்து..

உழைப்பவர் என்றும்

உயரே வாழ்வார் என

உணர்த்திய உழைப்பாளி...

என்றும் கொள்ளலாமே...

விழுந்து வணங்குகின்றேன்

விழுந்து வணங்குகின்றேன்

கண்ணன் ஐயா,நல்ல விண்ணப்பம்.வெளிநாட்டில் வாழும் தமிழர்களில் பலர் தமிழோதி,தமிழாய்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.ஆனால் தமிழகத்தில்தான் கட்சி,இலக்கிய உலக அரசியல் தமிழை அழித்து விட்டுத்தான் மறுவேலை பார்ப்பார்கள் போலிருக்கிறது.

தாலேலோ! பாட வாருங்கோ தங்கையரே! தாய்மாரே!

தாலேலோ! பாட வாருங்கோ தங்கையரே! தாய்மாரே!

மிகச் சரி.சமீபத்தில் அப்பரின் மாதர்பிறைக் கண்ணியானை பாடலை விஜய் சிவா பாடிய பாடல் வீடியோ வடிவில் பார்க்கக் கிடைத்தது.

திருமுறைகளும் பிரபந்தப் பாடல்களிலும் எண்ணற்ற அழகிய பாடல்கள் இருக்கின்றன என்பதை பல பாடகர்கள் மேடைப்பாடகர்கள் நினைவில் இல்லையோ என்றே எண்ணத் தோன்றுகிறது.

Friday, May 9, 2008

சனிமூலை

சனிமூலை

சனி மூலையானாலும் சொல்லும் விதயம் நேராகவும் ஜோராகவும் இருக்கிறது.இணைய வலைப்பக்கங்களிலும் பல 'கவுஞர்கள்' வெறியோடு 'உணர்ச்சி வடிகாலாய்' 'கவுஜ' எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.

ஏதாவது சொன்னால் வேப்பிலையைக் கட்டிக்கொண்டு ஆட ஆரம்பிப்பார்கள்.

ஆத்தா...ஏ..ஆத்தாஆஆஆஆஆஆஆ.......

தாங்கவில்லை !!!!!!!

Tuesday, May 6, 2008

சில சந்தேகங்கள் – சில விளக்கங்கள்

சில சந்தேகங்கள் – சில விளக்கங்கள்

எனது குறிப்புக்காக ஒரு பதிவின் மூலம் விளக்கம் அளித்ததற்கு நன்றி.

///////தெளிவுள்ளவர்கள் புரிந்துக் கொண்டிருப்பர்////////
அவரவர் தெளிவு அவரவர்க்கு !

/////கடலுக்கு வெறுமே காலை நனைக்க வருபவருக்கு இது பற்றித் தெரிய நியாயமில்லை தான்.//////
நான் பாலகுமாரனின் எழுத்துக்களை மெர்க்குரிப்பூக்களில் இருந்து,இப்போதெழுதிய உடையார்,காதலாகிக் கனிந்து' வரை படித்தவன்தான்.

அதே நேரம் திருமுறைகளிலிருந்து,திருமந்திரம் வரையிலான பரிச்சயமும் இறை, அன்போடு எனக்களித்த கொடை.

எவை கடல் என்பதில் கிணறு,சிறுகுளம்,ஏரி,உண்மையான கடல் ஆகியவற்றை,தனித்தனியே அவை மட்டும்,மற்றும் அனைத்தையுமாக அறிந்தவர்களிடையே,மாறுபட்ட கருத்துக்கள் இருப்பது உலக நியதி.

மற்றபடி உங்களையோ பாலகுமாரனேயோ குறைத்து மதிப்பிடுவதோ எள்ளுவதோ என் நோக்கமல்ல.அவரின் எழுத்துக்களில் தோன்றும் அதே தொனி இங்கும் தெரிந்ததும்,பல முன்னணி எழுத்தாளர்கள் இணையத்தில் எழுதுவது வழமையாகி விட்ட நிலையிலும் எனது மேற்கண்ட கருத்து அமைந்தது.
அது புண்படுத்தும் விதத்தில் இருப்பின் வருந்துகிறேன்.

புரிதலுக்கும் நீண்ட விளக்கத்திற்கும் நன்றி.
************************************************************************
உரைநடை-அதிலும் பொருளற்று-எழுதி,வார்த்தைகளை உடைத்துப் போட்டு விட்டால் அது கவிதை என்றெண்ணிக் கொண்டிருக்கும் வான்கோழிகளையும்,

பின்னூட்டங்கள் ஏன் சேகரிக்கப்படுகின்றன என அறியாத ,பின்னூட்டம் கூட கருத்துடன் எழுதவியலாத,'மேல்மாடி காலி'க் கூடங்களையும் பார்க்க சிரிப்புதான் வருகிறது.

மொழி ஞாயிறு தேவ நேயப் பாவாணர் !

மொழி ஞாயிறு தேவ நேயப் பாவாணர் !
//சங்க பலகை ஐயா,உங்களை எப்படி பாராட்டுவதென்றே தெரியவில்லை, மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. நீங்கள் பரிந்துரைத்திருக்காவிடில் எனக்கு அவருடைய நூல்களை படிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்காது.கோடி நன்றிகள் !பின்னூட்டத்தை வெளியிட்டுவிட்டு நீங்கள் என்ன எழுதி இருந்தீர்கள் என்பதை சரியாக கவனிக்காமல் இருந்துவிட்டேன். தாமதத்திற்கு மன்னிக்கவும்.சங்க பலகை ஐயா,உங்களை எப்படி பாராட்டுவதென்றே தெரியவில்லை, மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. நீங்கள் பரிந்துரைத்திருக்காவிடில் எனக்கு அவருடைய நூல்களை படிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்காது.கோடி நன்றிகள் !பின்னூட்டத்தை வெளியிட்டுவிட்டு நீங்கள் என்ன எழுதி இருந்தீர்கள் என்பதை சரியாக கவனிக்காமல் இருந்துவிட்டேன். தாமதத்திற்கு மன்னிக்கவும்.//நன்றி,நானும் வெகு நாள் கழித்துத்தான் உங்கள் பதிலைப் பார்த்தேன்.பாவாணர் நூல்கள் மட்டுமல்ல,சுமார் 300 புத்தகங்கள் வரைக்கும் இதுவரை சிங்கை நூலகத்திற்குப் பரிந்துரை செய்திருக்கிறேன்;ஒரு மின்மடல் அனுப்பி பாராட்டினார்கள்(நானே சொல்ல கொஞ்சம் கூச்சமாய்த்தான் இருக்கிறது,ஆனாலும் வேற யாரும் சொல்ல முடியாது,இல்லையா??? :-))அப்புறம் ஐயா' எல்லாம் போட்டு என்னை பெரியவராக்கி விடாதீர்கள்,நானும் உங்கள் சக வயதினன் தான்..-சங்கப்பலகை & அறிவன்

Monday, April 14, 2008

வந்து விட்டது சென்னை டைம்ஸ் ஆ·ப் இந்தியா

வந்து விட்டது சென்னை டைம்ஸ் ஆ·ப் இந்தியா

நல்ல விமர்சனம்.இந்து'வின் வாசக வட்டம் சிறிதே கட்டமைப்பானது என எண்ணுகிறேன்,அதுவும் தரத்தில் நீர்த்தே வந்திருக்கிறது.இப்பொதைய சூழலில் இணையத்தில் மட்டுமே செய்தித்தாள்கள் படிக்க முடிகிறது.

Saturday, April 12, 2008

டோண்டு பதில்கள் - 11.04.2008

டோண்டு பதில்கள் - 11.04.2008

///////சிங்கப்பூரும் நம் ஊர்களைப் போலத்தான் முதலில் அழுக்காக இருந்தது. ஆனால் லீ வான் கியூ வந்து எல்லோரையும் செருப்பால் அடித்து வழிக்கு கொண்டு வந்தார். இதில் என்ன விசேஷம் என்றால் அவர் யாரையுமே தனக்கு வேண்டியவர்களாகக் கருதாது பாரபட்சமற்ற முறையில் நீதி அளித்தார். இம்மாதிரி விஷயங்களில் அடி உதவுவது போல அண்ணன் தம்பிகள் கூட உதவ மாட்டார்கள்.////////மிகச்சரியான பதில்.அவர் பெயர் லீ க்வான் யூ.அவரின் இரு புத்தகங்கள்- தி சிங்கப்பூர் ஸ்டோரி,ஃப்ரம் தேர்ட் வேர்ட்ல்ட் டு ஃப்ர்ஸ்ட்,இரண்டையும் படித்துப் பாருங்கள்,ஒரு அரசின் தலைவன் எப்படி செயலாற்ற முடியும் என்பதற்கான ப்ளூ பிரிண்ட் அவை.நமது அரசியல்வாதிகள் அவரிடம் 'மொரார்ஜி வைத்தியம்' பார்த்துக் கொண்டால் கூட புத்திவராது என நினைக்கிறேன்.

*******************************************************

dondu(#11168674346665545885) said...
அறிவன் அவர்களே,சிங்கப்பூரில் லீ க்வான் யூ என்றால் நம்ம தேசத்துக்கு மோடி இருக்கிறாரே. அதே செட்டப்பை வைத்து குஜராத்தை எங்கேயோ கொண்டு போயுள்ளாரே. அன்புடன்,டோண்டு ராகவன்

*******************************************************

அறிவன்#11802717200764379909 said...
மோதியை லீ சீனியருடன் ஒப்பிடுவது சிறிது அதீதம்.லீ சிங்கப்பூரின் மத,இன ஒற்றுமை தான் டிநாதம் என நினைத்து செயல்பட்டவர்.அதை மீறியவர் எவராயினும் தயவு தாட்சனியமின்றி நடவடிக்கை எடுத்தவர்.ஆனால் மோதி நிர்வாக சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தாலும் இன அமைதிக்கு எதிராக செயல்படுவதான பிம்பம் இருக்கிறது;அதைத் துடைத்தெறிய அவர் முயற்சி எடுக்காதவரை அவரின் மீதான நம்பகத்தன்மை கேள்விக்குரியதே..

Thursday, April 3, 2008

ஒகேனக்கல்லும் கட்டாயத் தமிழ்க்கல்வியும்

ஒகேனக்கல்லும் கட்டாயத் தமிழ்க்கல்வியும்

///////நாளை தமிழ்நாட்டிலும் இப்படி ஒரு பிரச்சினை வெடிக்காமல் இருக்கவேண்டுமானால், பொருளாதார ஏற்றத்தாழ்வை, மொழிரீதியாக மொழிபெயர்க்க முடியக்கூடாது. தமிழைத் தேர்ந்தெடுக்காமலேயே உயர்கல்வி வரை செல்பவன் நிச்சயமாக தொழிற்கல்விக்குத் தான் செல்வான், பெரும்பாலும் பொருளாதார சுபிட்சத்தை அடைவான். பொருளாதார சுபிட்சம் பெறாத பெரும்பாலானோர் தமிழ்க்கல்வி படித்தவராக இருப்பார்கள் - கவனிக்கவும், தமிழ்க்கல்வி படித்தால் பொருளாதார சுபிட்சம் பெறமுடியாது எனச் சொல்லவில்லை - தேன்மாரியே பொழிந்தாலும்கூட பொருளாதார சுபிட்சம் பெறாத ஒரு சதவீதத்தினர் இருப்பார்கள், அவர்களில் பெரும்பாலானோர் தமிழ்க்கல்வி படித்தவர்களாகத்தான் இருப்பார்கள். அன்றைய அரசியல்வாதிகளுக்கு, தமிழ் படித்தவன் - படிக்காதவன் என ஒரு ஏற்றத்தாழ்வைக் கட்டமைப்பதும், ராஜ் தாக்கரேக்களும் நாகராஜ்களும் தமிழ்நாட்டிலும் உருவாவது சாத்தியப்படக்கூடும்.

அது சாத்தியப்படக்கூடாது, அப்படிப்பட்ட சில்லறைப் பிரிவினைவாதிகள் ஏற்படக்கூடாது என்றால், எல்லாரும் மொழிரீதியாகச் சமமாக இருத்தல் அவசியம். இந்தக்காரணத்தினாலும், நான் கட்டாயத் தமிழ்க்கல்வியை ஆதரிக்கிறேன்////////

கட்டாயத் தமிழ்க் கல்வியை நானும் ஆதரிக்கிறேன்,ஆனால் நீங்கள் சொல்லும் காரணங்கள் ஏற்புடையனவையா என்பதில் சில சந்தேகங்கள் இருக்கின்றன.


இன்று பொருளாதார வளர்ச்சி பெறாதவர்கள் தமிழ் மட்டுமே படித்தவர்களாக இருப்பார்கள்'என்ற கருத்து உருவாக என்ன காரணம் என நினைக்கிறீர்கள்?

தகவல் பரிமாற்றம்,பண்பாடு ஆகிய விதயங்கள் மட்டுமே சார்ந்த மொழியை உணர்ச்சி பூர்வமாக ஆக்கி,சுமார் 40 ஆண்டுகளாக ஆங்கிலம்,மற்றும் இந்தி ஆகிய மொழிகளை ஏதோ விரோதி மொழிகள் போன்ற மனோபாவத்தை மக்களிடையே விதைத்து சமூகத்தை சீரழித்த அரசியல் கட்சிகள்தான் காரணம்.

தாய்மொழியில் படிக்கும் போதுதான் குழந்தைகள் தெளிவுடன்,புரிதலுடன் படிப்பார்கள் என்பது ஒரு புறமிருக்க,வேற்றுமொழிகளுக்கு இங்கே வேலையில்லை எனக் கிளப்பிய நெருப்பில்,பொருளாதார இணைப்பு மொழியான ஆங்கிலமும் கருகியதுதான் மிச்சம்;அதன் எச்சங்கள் தான் இன்றைய சமூக வேறுபாடுகள்.

குப்பனும்,சுப்பனும் அவரவர்களில் ஈடுபாட்டுக்கு ஏற்ப இந்தியோ ஆங்கிலமோ படித்துத் தேர்ந்திருப்பார்கள்;அவரவர்களின் வாழ்க்கையும் அவர்களின் எதிர்காலமும்,பொருளாதார நிலையும் வேறாக இருந்திருக்கும்...

உண்மையில் மும்மொழிக் கொள்கைகள் வலுப்பட்டிருந்தால்,இப்போது ஏற்பட்டிருப்பது போன்ற மொழி சார்ந்த வெறித்தனங்கள் ஏற்பட்டிருக்காதோ என்னவோ...

***************************************************************

பினாத்தல் சுரேஷ் said...

அறிவன்,

//கட்டாயத் தமிழ்க் கல்வியை நானும் ஆதரிக்கிறேன்,ஆனால் நீங்கள் சொல்லும் காரணங்கள் ஏற்புடையனவையா என்பதில் சில சந்தேகங்கள் இருக்கின்றன.//

நான் சொல்லும் காரணங்கள் என்பது ஒரு அதீத சிந்தனையிலும், அளவுக்கதிகமான ஆப்டிமிஸத்திலும் எழுதப்பட்டுவிட்டதோ என்ற எண்ணம் எனக்கே - குறிப்பாக கொத்தனார், ஸ்ரீதர், ஓகை, தமிழன் மற்றும் உங்கள் பின்னூட்டங்களைப் படித்ததும் தோன்றுகிறது. நான் எழுதிய லாஜிக்கில் ஓரளவாவது சாரம் இருப்பதாக இன்னும் கருதவும் செய்கிறேன் என்பதால் குழப்பம்தான் அதிகமாகிறது :-))

//மொழியில் படிக்கும் போதுதான் குழந்தைகள் தெளிவுடன்,புரிதலுடன் படிப்பார்கள் என்பது ஒரு புறமிருக்க,வேற்றுமொழிகளுக்கு இங்கே வேலையில்லை எனக் கிளப்பிய நெருப்பில்,பொருளாதார இணைப்பு மொழியான ஆங்கிலமும் கருகியதுதான் மிச்சம்;அதன் எச்சங்கள் தான் இன்றைய சமூக வேறுபாடுகள்.//

இதை முழுக்கவே ஒப்புக்கொள்கிறேன்.

Wednesday, April 2, 2008

தமிழர்களின் பல பின்னடைவுகளுக்கு “திராவிட” வாய்க் கொழுப்பே காரணம் - 1

தமிழர்களின் பல பின்னடைவுகளுக்கு “திராவிட” வாய்க் கொழுப்பே காரணம் - 1

நேர்கொண்ட பார்வையில் எழுதப்பட்டிருக்கும் நல்ல ஒரு பதிவு.

///////கர்நாடக அரசாங்கத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு குறித்து தமிழக முதல்வராக இருப்பவர் ரியாக்ஷன் காட்டலாம். அங்கே உள்ள ஏதோ சில மொழிவெறி அமைப்பின் வார்த்தைகளுக்கு மதிப்பளித்து இவரை யார் பேசச் சொன்னார்கள்?

சென்னையில் ஒரு பாலத்தைத் திறந்து வைக்கும் முதல்வருக்கு ஒகேனக்கல் பற்றிப் பேச என்ன அவசியம்? "எங்கள் பேருந்துகளை அல்ல; எங்கள் எலும்புகளையே நொறுக்கினாலும் அந்தத் திட்டம் நிறைவேறியே தீரும்” என்பதெல்லாம் ஒரு முதல்வர் பேசும் பேச்சா? அல்லது உங்கள் வார்த்தைகள் தான் உண்மையானவையா? பெங்களூரில் ஒரு வீட்டு ஜன்னல் கண்ணாடி நொறுங்கினாலோ தாங்க முடியாத நீங்கள் எலும்புகளைப் பற்றி எல்லாம் பேசலாமா? அப்படி வீரம் பேசுபவர் பெங்களூருவில் கூட்டம் கூட்டிப் பேசுவது தானே? சென்னையில் பாதுகாப்பான இடத்தில் உட்கார்ந்து கொண்டு அங்கே இருப்பவர்களின் பாதுகாப்பு குறித்த அக்கறை ஒருசிறிதும் இன்றி இப்படிப் பேசினால் . . .?

வீரப்பன் பிடியில் இருந்து முக்கியஸ்தர்களை மீட்க வேண்டிய சந்தர்ப்பங்களில் எல்லாம் அரசியல் காழ்ப்புணர்வில் எதிர்க்கட்சியினர் தூண்டி விட்டும் பொறுப்புடன் அமைதி காத்த கருணாநிதி, இத்தகைய தருணங்களில் கர்நாடகாவில் இருக்கும் தமிழர்களின் கதியைப் பற்றி யோசிக்காமல் பேசியிருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது.//////////

மு.க'வின் செயல்களை நெடுக கூர்ந்து கவனித்து வருபவர்கள் இதில் ஆச்சரியம் கொள்ள மாட்டார்கள்.அவர் எதிலும் தனக்கும் தன் கட்சிக்கும் என்ன ஆதாயம் கிடைக்கும் எனப் பார்ப்பார்;இல்லையெனில் தலைக்கெறிய ஆணவத்தில் ஏதாவது பேசி வைப்பார்.
ஆதி நாட்களில் சட்ட சபையின் காங்கிரஸ் பெண் உறுப்பினரைப் பார்த்து,'பாவாடையைத் தூக்கிப் பார்த்தால் தெரியும்' என சட்டசபையில் பதில் சொன்ன மகான் அவர் !
ஒகேனக்கல் திட்டத்தைப் பொறுத்து, தன் மகன் முதன்முதலில் ஒரு வெளிநாட்டின் அரசியல்,ஆட்சி நிபுணர்களை சந்தித்து கொண்டுவந்த திட்டம் என்ற தற்பெருமையில் விளைந்த செருக்கும்,இன்னொரு பதிவர் கூறியபடி அதிமுக/பாஜக வுக்கு கத்தி வைக்கலாம் என்ற நோக்கமும் அவரின் பேச்சுக்குக் காரணிகளாக இருந்திருக்கலாம்.
வீரப்பனாரைப் பற்றிப் பேசாமல் இருக்கக் காரணம்,வீரப்பானார்,அவருக்கு வேண்டும் சமயங்களில், ஜெ'க்குக் குடைச்சல் கொடுக்கும் ஒரு காரணியாக உதவியதாலும்,ஆரம்ப நாட்களில் வீரப்பனாரின் அரசியல் பங்குதாரராக அதிமுக அமைச்சர் இருந்ததும்,அதனாலேயே வீரப்பனை உயிருடன் விட்டுவைக்கக் கூடாது என ஜெ.நினைத்ததும்,வீரப்பன் என்ற காரணி,தன் அரசியலுக்கு வேண்டும் என முக.நினைத்ததாலும் அவ்விதமான வேறு நிலைப்பாடுகளை எடுத்தார்.
சேதுக் கால்வாய் விவகாரத்திலும் அவரிம் மமதையான பேச்சே பல பிரச்னைகளுக்கு அடிகோலியது.

இவை ஒரு புறமிருக்க,ஆளுனர் ஆட்சியில் இருக்கும் கர்நாடகத்தில் இவற்றை எப்படி மைய அரசு பொறுத்துக் கொண்டிருக்கிறது என்பதே கேள்விக்குரிய மிகப் பெரிய அவலம்.

இவற்றிற்கெல்லாம் காரணம் மாநிலத்துக்குள் வட்டாரம்,சாதி போன்ற காரணிகளை தங்கள் அரசியல் பிழைப்புக்காகவும் அடிவருடித்தனத்துக்காகவும் ஊக்குவிக்கும் மாநில அரசியல்வா(வியா)திகளே காரணம்.

வட்டாள் நாகராஜ் என்பவர் யார்,அரசமைப்பில் அவருக்கு என்ன அதிகாரமோ,தலைமைத்துவமோ இருக்கிறது?
ஒரு சரியான மைய அரசு சத்தமில்லாமல் இரு போன்ற ஆட்களை தூக்கி, ஒரு 20 வருடம்,30 வருடம் உள்ளே போட வேண்டும்.
இவர் போன்ற ஆட்கள்,வட்டார உணர்வுகளைத் தூண்டிவிடுவதின் மூலம் பெரிய ஆளாக முயல்பவர்கள்.


நாட்டின் இயற்கை வளங்கள் அனைத்தும் தேசிய உடமையாக்கப் பட்டு மைய அரசின் கட்டுப்பாட்டில் இவை வருவதும்,எவ்வளவு செலவெனினும்,நதிகள் இணைப்பை ஆரம்பிப்பதும்தான் இவை போன்ற பிரச்னைகளை தவிர்க்கும் வழிமுறைகள்..

Star Posting எழுத்தாளர் பாலகுமாரன்

Star Posting எழுத்தாளர் பாலகுமாரன்

பாகு'னின் இரும்புக் குதிரைகள் முதற்கொண்டு பல நாவல்களைப் ப் படித்திருக்கிறேன்.
பின்னூட்டத்தில் பலர் புகழ்ந்திருக்கும் அளவுக்கு அவருக்கு ஒரு வெளிச்சவட்ட பிம்பம் தேவையில்லை என்பதே என் கருத்து.
அவரின் நாவல்கள் பலவும் சிறிதாகக் காமம் கலந்து,இளைஞர்களும் யுவதிகளும் scintillate ஆகும் வகையிலான ஒரு கவர்ச்சி எழுத்தே.
வெகுஜன ஊடகங்களில் அவ்வகையான எழுத்து வடிவம் பரவலாக இல்லாத நேரத்தில் இம்மாதிரி எழுதியதோடு,பெண்களின் சார்பையும் கைக்கொண்டதால் சுலபமான ஒரு வாசகர் வட்டம் கிடைத்தது.
இதை தனக்கான விளம்பரத்தை அதிகரித்துக் கொள்ளவே பெரிதும் உபயோகித்தார்,வைரமுத்து தனக்குத்தானே கவியரசு பட்டம் வழங்கிக் கொண்டது போல. மேலும் பிற்காலத்தில் சித்தர் வேடம் தாங்கவும் ஆரம்பித்து விட்டார்.

ரவூஸு தாங்கலடா சாமி !!!!!!

ஒரு காலகட்டத்தில் அவரின் பல நாவல்களும் ஒரே விதமான கதையையே சொன்னன..
விதிவிலக்காக அமைந்த 'பலாமரம்' போன்ற ஒரு சில நாவல்களுக்கு மட்டுமே அவர் பெருமிதப்படலாம்.
ஆனால் இவை போன்ற முயற்சிகள் வெகு சிலவே.
பிற்காலத்தில் இவ்வகையான பெரும் வாசகர் கூட்டத்தை சிறிது ஆன்மீகம் சார்ந்த விதயங்களில் திருப்பி விட்டதுதான் அவர் வாசக உலகத்துக்கு செய்திருக்கும் பெரும் உதவி.
இது தவிர ஒரு ராஜேஷ்குமார்,ஒரு பட்டுக்கோட்டை பிரபாகர் வரிசையில் தான்,சிறிதே-மிகச்சிறிதேயான-மேல்மட்டத்திற்கு வருகிறார்.
இதில் கல்கியைப் பார்த்து சூடு போட்டுக் கொண்ட கதையாக 'உடையார்' நாவல்....
'கானமயிலாடக் கண்டிருந்த வான்கோழி...' என்றொரு பாடல்,அதுதான் நினைவுக்கு வருகிறது.
ஓரளவு எழுதி இருக்கிறார்,ஆனால் அதற்கு அவர் தேடும் வெளிச்சப் புகழ் அளவற்றதும்,அநியாயமானதும் !!!!!

Saturday, March 29, 2008

காவியப் பாவை ஜீவிதம்

காவியப் பாவை ஜீவிதம்

கொஞ்சம் மறந்துதான் போய்விட்டது,இன்று மின்மடல்களை ஒழுங்குபடுத்தும் முயற்சியில் மடல் கண்டு மீண்டு(ம்) வந்தேன்.
முதலில் அருமையான,அழகான,நல்ல முயற்சிக்கான வாழ்த்துக்கள்,கவிதையின் பொருளை இயன்ற அளவில் கொண்டுவர முயன்றதற்கான பாராட்டுகள்.
////கணப்பொழுது வானின் கண்ணது
சுடர்விட்டுப் பொலிந்திடும்//// போன்ற வரிகளில் 'சானெட்ஸ்'ஐ அப்படியே கொண்டு வரும் 'கவித் தவிப்பு' தெரிகிறது.
சில இடங்கள் மேலும் நறுக்கென்று இருந்திருக்கலாமோ என்றும் தோன்றுகிறது.
காட்டாக, ///////எழிலார்ந்த எந்தவொன்றும்
எழிற்கோலம் சற்றே பிறழ்ந்திடும்.
விதிவசத்தால் சில பொழுது,
வழிமாறாது சென்றிடும்
இயற்கையால் சிலபொழுது./////
என்பவை போன்ற வரிகள் சிறிது கவிதைக் கட்டைக் குறைப்பது போன்ற தோற்றம் தருகின்றன.
இதை எனது அரைகுறை முயற்சியில்,
/////அகிலத்தின் அழகெழில்கள்
வளர்ந்திடும் நாட்களிலே
கலைந்திடும் சிலநேரம்/////
என சொல்லலாமோ????

முழுமையாகப் படிக்கையில் சானெட்ஸ்'ன் இன்பத்தை சிந்தனைக்குக் கடத்துவதில் வெற்றி பெற்றிருக்கிறீர்கள் !

வேறொரு சுவையான கோணம் இருக்கிறது,ஷேக்ஸ்பியர் இந்தக் கவிதையில் காதலியை உருவகப் படுத்துவதாகவே பலரும்,உங்கள் மொழிபெயர்ப்பு உட்பட,பொருள் கொடுக்கிறார்கள்.Out of the box idea' வாக வேறெதுவும் உங்களுக்குத் தோன்றுகிறதா?
***************************************************************

பாச மலர் said...
நன்றி அறிவன்..உங்கள் வரிகள் மிகவும் பொருந்தி வருகின்றன..உங்கள் ஆலோசனையை வரும் முயற்சிகளில் பின்பற்ற முயல்கிறேன்..

காதலி தவிர அவருடைய புரவலர் Earl of Southampton அவரின் நட்பு பாராட்டும் முகமாகவும் இந்த sonnets இருந்ததாகப் படித்துள்ளேன்..அதைப் பற்றிய விவகாரமான விவாதங்களும் இன்னும் ஆய்வுகளில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன..
****************************************************************

அறிவன் /#11802717200764379909/ said...
மிக்க நன்றி மலர், என்னுடைய கருத்தை இயல்பாக எடுத்துக் கொண்டதற்கு !!!
நானே சிறிது பயந்து கொண்டுதான் இருந்தேன்,முன்பொரு முறை ஒரு பதிவர்-ஒரு பெண்- சில கவிதைகளை எழுதியிருந்தார்,அழகியல் நோக்கில் சில விதயங்களை சுட்டி ஒரு கருத்து சொல்லியிருந்தேன்..
மிகு காட்டமாக,என்னுடைய கவிதை வரிகளுக்கு மாற்று சொல்ல நீ யார்??? என சண்டைக்கே வந்து விட்டார் !
தாயே,மன்னித்து விடுங்கள்,இனி கனவிலும் இப்பக்கம் வரமாட்டேன் எனச் சொல்லி அவர் வருந்தியதற்கு என் வருத்தத்தைத் தெரிவித்து விட்டு வந்துவிட்டேன்.
உங்களுக்கு பதில் எழுதும் போதும் மிகவும் யோசித்தே எழுதினேன்,பயமுடன்..
இயல்புடனும்,நட்புடனும் அதை அணுகியதற்கு நன்றி.

மற்றபடி சானெட்ஸ் 18 ல்,'காதலி' என்ற பொருளை எடுத்துவிட்டு 'இளமை' என்ற பொதுப் பொருளை கருதி கவிதை முழுவதையும் படித்துப் பாருங்கள்,ஒரு புதிய கோணம் கிடைக்கும்.
வோர்ட்ஸ்வொர்த் இந்த நோக்கிலேயே
We'll talk of sunshine and of song,
And summer days when we were young,
Sweet childish days which were as long
என்றெழுதியதாகவும் சில ரசிகர்கள் குறிப்பிடுகிறார்கள்.

பின்னவரின் பல கவிதைகளில் முன்னவரின் பல சாயல்கள் இருக்கும் என்பதைக் கவனித்திருக்கிறீர்களோ??????

*****************************************************************************

March 31, 2008 2:55 AM
பாச மலர் said...
மீண்டும் நன்றி அறிவன்..விமர்சனங்கள் எப்போதுமே வளர்ச்சிக்கு உதவும்..

நீங்கள் சொல்வதும் புதிய கோணம்..பொருந்தி வருகிறது..

இருவருக்குமிடையே உள்ள ஒற்றுமை பல இடங்களில் வெளிப்படும்..

Wednesday, March 26, 2008

நட்சத்திர வாத்தியாருக்கு ஒரு கேள்வி!

நட்சத்திர வாத்தியாருக்கு ஒரு கேள்வி!



இலவசம்,மிகச் சரியான ஒரு கேள்வியைக் கேட்டிருக்கிறீர்கள்.

அண்ணாவின் ஒரே ஒரு பங்களிப்பு என்று எதைச் சொல்லலாம் என்றால்,வடமொழி கலந்து பேசும் தமிழ்தான் தமிழ்ப் பாண்டிதர்களுக்கு அழகு என்று இருந்த ஒரு காலத்தில்,ஆற்றொழுக்கான தனித் தமிழே நல்ல தமிழ் என்ற பாதைக்கு வலு சேர்த்தது.
மகாகவி என நாம் போற்றும் பாரதியும் உரைநடை எழுதும் போது மணிப்பிரவாளம் எனச் சொல்லப்பட்ட வடமொழி கலந்தே எழுதினார்;அவ்வாறு எழுதுவதே கற்றறிந்தவர் எழுதும் தமிழ் எனக் கருதப்பட்டது.
அக்கருத்தை வலுப்படுத்தியவர்கள் ஆரியர்கள் எனச் சொல்லப்படும் பிராமணர்கள்.ஆயினும் அக்காலத்திலேயே நேர்பட,தமிழின் தொன்மையும் அழகும் செறிவும் தெரிந்த பிராமண சமூகத்தவர்களும் இருந்தார்கள்,பரிதிமாற்கலைஞர் என தன் பெயரை தூய தமிழில் மாற்றிக் கொண்ட சூரிய நாராயண சாஸ்திரி அவர்களில் ஒருவர்.மேலும் மறைமலையடிகள்(வேதாசலம் எனற பெயரை மாற்றிக் கொண்டார்) மற்றும் பாவாணர் போன்றோர் அண்ணாவின் காலத்துக்கு முன்பே தனிதமிழ்க் கொடியை உயரப் பிடித்து விட்டார்கள்.
அண்ணா அப்பேச்சை நாடகங்களிலும் புகுத்தினார்,தமிழர்களில் சாபக்கேடு என்னவெனில்,பொழுதுபோக்கு ஊடகங்களுக்கு அவற்றின் தகுதிக்கு அதிகமான பதிப்பு கொடுப்பது.இதன் காரணமாக அண்ணாவின் தமிழும்,மேடைப் பேச்சும் ரசிக்கப்பட்ட அளவுக்கு அவர் அரசியல் தலைவராகவும் உருவகம் செய்து ரசிக்கப்பட்டார்,போற்றப்பட்டார்..
இந்த உந்துவிசைக்கு மேலும் வேகம் சேர்க்க,பெரியாரின் சில சமூக சீர்திருத்தக் கருத்துக்களை-விதவைகள் திருமணம்,பால்ய விவாகத்தை தடுத்தல்,சமூகத்தில் பெண்களுக்கு உரிய உரிமைகள்-தங்கள் இயக்கக் கொள்கைகளாக வரித்துக் கொண்டார்கள்.
இவை ஒரு சமூக ஆர்வலரின் ஆர்வங்களே ஒழிய சுதந்திரம் அடைந்து வளர்ந்து கொண்டிருந்த ஒரு நாட்டை வழிநடத்த தேவையான சிறந்த தகுதிகள் இல்லை.
துரதிருஷ்டவசமாக பெருவாரியான மக்கள் அண்ணாவின் மேல் இந்த உருவகத்தையும் அணிந்தே பார்த்தார்கள்;ஒரு மீட்பர் என்ற அளவுக்கு உயர்த்தினார்கள்.
அண்ணாவுக்காவது ஓரளவுக்கு,இந்த மக்களுக்கும்,நாட்டுக்கும் ஏதாவது முன்னேற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என்ற ஆசையாவது இருந்தது.
இந்த நேரத்தில் அண்ணா நோய்வாய்ப்பட,பின்னர் மறைய(மறையவைக்கப்பட்டார் எனவும் வதந்தி உண்டு !) முக வெற்றிகரமாக அவருக்கேயுரிய cunningness(இதற்கான சரியான ஒரு தமிழ்ச் சொல்லை முன்பொருமுறை உபயோகித்தபோது கடும் கண்டனங்கள் எழுந்தன,எனவே ஆங்கில வார்த்தையையே வைக்கிறேன்!) உடன் கட்சித் தலைமையையும்,ஆட்சியையும் பிடித்தார்.
அவரின் நல்ல நேரமோ,தமிழகத்தின் போதாத நேரமோ,அவ்வகையான மேடைப்பேச்சு ஒன்றே அரசியல் வாதிக்கான தகுதி என்றாகிப் போனது.
அவர்களில் செயல்பாடு சமூகத்தில்,நாட்டில் என்ன மாற்றங்களைக் கொண்டு வந்தது என்ற வகையில் அளவீடுகளே இல்லாமல் போனது !!!!!!

(இப்போதும் பொங்கத் தயாராக இருக்கும் அடிப்பொடிகள்,சிங்கப்பூர் போன்ற நாட்டில் ஒரு அரசின் தலைவன் என்ன செய்யமுடியும் என்ற விதயங்களை படித்து அறிந்து கொண்டு பின்னர் என்னை விமர்சிக்க வருமாறு அன்புடன் வேண்டுகிறேன்)

சுப்பையா அவர்களின் பதிவைப் பார்த்தவுடனேயே இதை எல்லாம் எழுதத் தோன்றியது;ஆனால் பதிவுலக அடிப்பொடிகள் பலர் உடன் வரிந்துகட்டிக் கொண்டு வருவார்கள்,எனவே விட்டுவிட்டேன் !

Monday, March 24, 2008

அதிகார மையங்களை கேள்வி கேட்கும் போராளி அரைபிளேடு குறித்து...

அதிகார மையங்களை கேள்வி கேட்கும் போராளி அரைபிளேடு குறித்து...

////////படிக்க முடியலைன்னு சொல்றீங்கன்னா இலக்கியத் தரம் வாய்ந்த எழுத்தாத்தான் இருக்கணும்.

எழுதறப்ப கஷ்டமாயில்லை. எழுதி முடிச்சிட்டு படிச்சி பார்த்தா எனக்கே கஷ்டமா போயிருச்சி.

எலக்கிய தரமான எழுத்துன்னா சும்மாவா :)
//////////

கட்டுடைக்கப்பட்ட பின் நவீனத்துவத்துடனான,சாதீயக் குறியீடுகளும்,அதனின்று மீண்டெழுவனவாகவும் இருக்கின்ற மறுமலர்ச்சியையும்,சமூக அடாவடிகளை உடைத்தெடுக்கும் குறியீடுகளையும்,அவற்றை மீள்மறுப்புச் செய்யும் நுண்ணரசியலைச் சாடும் இவ்வகையான வேட்கைத் தெறிப்புகள்,களம் காணும் இலக்கியத் தரத்துடனான புத்தியல் நோக்கத்தின் கூறுபாடுகள்....
வாழ்த்துக்கள் தோழர் !!!!!!!!!!
(அப்பாபாஆஆஆஆஆ)

Sunday, March 23, 2008

ஒருவரின் கர்வம் அடக்க அவர் மனைவியை மயக்கு (தில்லை நடராஜ அவதார மகிமை)

ஒருவரின் கர்வம் அடக்க அவர் மனைவியை மயக்கு (தில்லை நடராஜ அவதார மகிமை)

ஒரு சிறிய கதை சொல்கிறேன்,இந்தக் கதைக்கும் இந்தப் பதிவுக்கும் எந்த தொடர்பும் இல்லை !!!!!!!!


அந்த ஆசிரியர் சோதனைகளை செய்து காண்பிப்பது மூலம் மாணவ்ர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என நினைப்பவர்.
குடியின் தீமையை விளக்க எண்ணி ஒரு பாட்டில் சாராயமும்,ஒரு புட்டியில் தண்ணிரில் விளையடிக் கொண்டிருக்கும் பூச்சியையும் கொண்டு வந்தார்.
வகுப்புக்கு வந்து,'மாணவர்களே,பாருங்கள்,இந்தப் பூச்சி மகிழ்வாக விளையாடிக் கொண்டிருக்கிறது,இதை இப்போது இந்தப் புட்டியில் இருக்கும் சாராயப் புட்டியில் போடப் போகிறேன்,என்ன நடக்கிறது என்று பாருங்கள்' என்று சொல்லி,தண்ணிரில் இருந்த பூச்சியை எடுத்து,சாராயப் போத்தலில் போட்டார்.
மாணவர்கள் வைத்தகண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தனர்.
சாராயப் போத்தலில் வீழ்ந்த பூச்சி சில நிமிடங்கள் பட படவெனத் துடித்தது,பின்னர் செத்து மிதந்தது.
ஆசிரியர் 'பாருங்கள்,சாராயம் சேர்வதால்,உடல்,உயிர் என்னவாகிறது தெரிகிறதா?' என ஒரு கருத்தைச் சொன்ன திருப்தியில்,'மாணவர்களே,என்ன தெரிந்து கொண்டீர்கள்,ரத்தினம்,நீ சொல் பார்க்கலாம்' என்றார்.
அந்த மாணவன் எழுந்து சொன்னான்,'சாராயம் குடித்தால் வயிற்றில் இருக்கும் பூச்சிகள் எல்லாம் அழிந்து விடும் ஐயா,ஆகவே எல்லோரும் சாராயம் குடிக்க வேண்டும் !!!!!.

Friday, March 21, 2008

தில்லை நந்தனாரும் அயோத்யா மண்டபமும்

தில்லை நந்தனாரும் அயோத்யா மண்டபமும்

/////முதலில் திருத்தொண்டர் புராணம் எழுதப்பட்ட பின்னணியைப் புரிந்து கொள்ள வேண்டும். இரண்டாம் குலோத்துங்க சோழன் எனப்படும் அநபாய சோழன் ஆட்சியில் போர் ஏதும் இல்லாததால் கலை கதை கவிதை என்கிற ஆர்வத்தில் சீவக சிந்தாமணியை ஆழ்ந்து படித்துக் கொண்டிருந்தானாம். வேளாள சமூகத்தைச் சேர்ந்த அமைச்சர் சேக்கிழாருக்கு, அரசன் படிப்பது சமண இலக்கியமாயிற்றே என்கிற உறுத்தல். அவரிடம் சைவத்தின் அருமை பெருமைகளை எடுத்துக் கூற, திருத்தொண்டர்களைப் பற்றி அளந்து விட வேண்டியதாயிற்று. மேல்விவரம் அறிந்து விளக்கமாகச் சொல்ல அவருக்கு அரசன் சுற்றுப் பயண ஏற்பாடுகள் செய்து கொடுக்க, அவர் சுற்றிச் சென்று தகவல் சேகரித்து வந்து எழுதி தில்லைக் கோயிலில் அரங்கேற்றிய நூல் தான் இது.///////

சைவத்தை மீட்டெடுக்க நடந்த ஒரு நிகழ்வாகவே வைத்துக் கொண்டாலும்,அதிலென்ன தவறு இருப்பதக நீங்கள் கருதுகிறீர்கள்?
களப்பிரர் அவர்களைத் தொட்ர்ந்த சமணர்கள் காலங்களில் தென்னிந்தியப் பகுதிகளில் நடந்த அக்கிரமங்களை வரலாற்றின் பக்கமும் சிறிது திரும்பிப் பாருங்கள்.
சமண்ர்களை சம்பந்தர் கழுவிலேற்றினார் என்பதை சமுதாய அழிவாகப் பார்க்கும் நீங்கள்,சமணர்கள் அவர்களின் கொள்கை ரீதியான எதிர்ப்பாளர்களை உயிருடன் எரித்த நிகழ்வுகள் சரித்திரத்தில் காணக் கிடைக்கின்றனவே,அதை எப்படி எடுத்துக் கொள்வீர்கள்?


மேலும் சைவத்தைப் பேணுபவர்கள்,சுய முயற்சியாக,ஒரு படையெடுப்பின் வழியிலோ,அல்லது மதம் பரப்பும் நோக்கிலோ எங்காவது சென்று பேரழிவுகள் நடத்தினார்கள் என்பதற்கு ஏதாவது வரலாற்றுச் சான்றுகள் தர இயலுமா?
ஆனால் சைவம்,வைணவம் தவிர மற்ற எல்லா கடவுள் கொள்கைக் காரர்களும் இத்தகைய பேரழிவுகளை,சுயமாக- suo moto-மற்றவரின் மேல் நடத்திக் காட்டியிருக்கிறார்கள் என்பதற்கு சான்றுகள் பல கானக் கிடைக்கின்றன.

பொதுவாக ஒருவன் நம்மைக் கொல்ல வரும் போது,அவனைக் தடுக்கும்,எதிர்க்கும்,தன்னைத் தற்காத்துக் கொள்ளும் போராட்டத்தில் எதிரியைக் கொல்லவும் தயாரான சூழலில்தான் யாரும் இருப்பார்கள்.
மேலும் திருமுறை நிகழ்வுகள் பலவற்றை கட்டுக்கதை எனச் சொல்லும் நீங்கள் இதை-சமணர்களை கழுவேற்றுவதை மட்டும்- வரலாற்று சான்றாக எடுத்திக் கொள்வது எண்ண,வாதப் பிறழ்வாகத் தோன்றவில்லையா?

மற்றபடி திராவிடம்,பிராமணீயம் போன்ற விதயங்களைத் நீங்கள் தொட்டிருக்கும் விதம் சரியான பார்வையில் இருக்கிறது.

சொல்ல வரும் கருத்தை,வாதத்தை திறமையுடன் வைக்கும் திறம்பெற்ற நீங்கள்,சைவம்,திருமுறை,இறைத் தத்துவம் போன்ற பலவகைகளில் பலமுறை,ஒரு சாய்வான நையாண்டிப் பார்வை,முறையையே கைக்கொள்வதிலிருந்து மாறுபட்டு,முதன்முதலில் சிறிது ஆய்ந்து விதயங்களைத் தொட்டிருக்கிறீர்கள்,அதற்கு முதலில் வாழ்த்துக்கள்.

மேலும் தெளிவு பெற,'பெரியபுராணம் ஒரு ஆய்வு'-அ.ச.ஞா. எழுதியது,படித்துப் பாருங்கள்,மேலும் உங்கள் பார்வை விரிவடையலாம் !

மற்றபடி நல்ல ஒரு பதிவு !

***********************************
அறிவன் சார்,

//சைவத்தை மீட்டெடுக்க நடந்த ஒரு நிகழ்வாகவே வைத்துக் கொண்டாலும்,அதிலென்ன தவறு இருப்பதக நீங்கள் கருதுகிறீர்கள்?//

தவறு என்று நான் சொல்லவே இல்லையே. இந்தப் பின்னணி உடைய கதை தான் இது என்கிற உணர்வோடு மட்டுமே அணுகச் சொன்னேன்.

//களப்பிரர் அவர்களைத் தொட்ர்ந்த சமணர்கள் காலங்களில் தென்னிந்தியப் பகுதிகளில் நடந்த அக்கிரமங்களை வரலாற்றின் பக்கமும் சிறிது திரும்பிப் பாருங்கள்.
சமண்ர்களை சம்பந்தர் கழுவிலேற்றினார் என்பதை சமுதாய அழிவாகப் பார்க்கும் நீங்கள்,சமணர்கள் அவர்களின் கொள்கை ரீதியான எதிர்ப்பாளர்களை உயிருடன் எரித்த நிகழ்வுகள் சரித்திரத்தில் காணக் கிடைக்கின்றனவே,அதை எப்படி எடுத்துக் கொள்வீர்கள்?//

எந்த சரித்திரத்தில்? சொல்லுங்கள்; படித்துப் பார்க்கிறேன். கொள்கைக்காகக் கொலை என்பது எந்த இடத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாதது தான்.


//மேலும் சைவத்தைப் பேணுபவர்கள்,சுய முயற்சியாக,ஒரு படையெடுப்பின் வழியிலோ,அல்லது மதம் பரப்பும் நோக்கிலோ எங்காவது சென்று பேரழிவுகள் நடத்தினார்கள் என்பதற்கு ஏதாவது வரலாற்றுச் சான்றுகள் தர இயலுமா?
ஆனால் சைவம்,வைணவம் தவிர மற்ற எல்லா கடவுள் கொள்கைக் காரர்களும் இத்தகைய பேரழிவுகளை,சுயமாக- suo moto-மற்றவரின் மேல் நடத்திக் காட்டியிருக்கிறார்கள் என்பதற்கு சான்றுகள் பல கானக் கிடைக்கின்றன.//

கழுவேற்றல் சமாசாரங்களை எந்த வகையில் வைப்பீர்கள் ஐயா?

//மேலும் திருமுறை நிகழ்வுகள் பலவற்றை கட்டுக்கதை எனச் சொல்லும் நீங்கள் இதை-சமணர்களை கழுவேற்றுவதை மட்டும்- வரலாற்று சான்றாக எடுத்திக் கொள்வது எண்ண,வாதப் பிறழ்வாகத் தோன்றவில்லையா?//

ராமாயணம் என்கிற கதையைக் கற்பனை என்கிறோம்; அந்த நூலின் இருப்பையே மறுப்பதில்லையே! அதே போல் சம்பந்தர் ஞானப்பால் குடித்ததைக் கற்பனைப் புனைவு என்கிறோமே தவிர, அவருடைய தேவாரப் பாடல்களை மறுக்கவில்லை. கழுவேற்றல் விவகாரத்தை வெறும் பெரியபுராண அடிப்படையில் சொல்லவில்லை. சரித்திர சான்றுகள் உள்ளன. மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நான் பள்ளிப்பருவத்தில் கண்ட ஒரு கழுமரம் தான் முதலில் நான் இந்தப் பாதகம் குறித்து அறிய வைத்தது. அப்போது எனக்கு தேவாரம் பற்றிக் கூடத் தெரியாது.

//சொல்ல வரும் கருத்தை,வாதத்தை திறமையுடன் வைக்கும் திறம்பெற்ற நீங்கள்//

ஒரு வேண்டுகோள். என்மீதான அன்பிலோ, அல்லது கடிந்து சொல்ல இருக்குமொரு கருத்தை மென்மையாகச் சொல்வதான அடிப்படையிலோ கூட இது போன்ற முத்திரைகளைத் தயவு செய்து தவிர்த்தால் நன்றி உடையவனாக இருப்பேன். என் கருத்துக்களை எப்போது தோன்றினாலும் எந்த டிகிரியில் கடிந்து சொல்வதையும் உவப்புடனேயே எதிர்கொள்வேன்.

//சைவம்,திருமுறை,இறைத் தத்துவம் போன்ற பலவகைகளில் பலமுறை,ஒரு சாய்வான நையாண்டிப் பார்வை,முறையையே கைக்கொள்வதிலிருந்து மாறுபட்டு,முதன்முதலில் சிறிது ஆய்ந்து விதயங்களைத் தொட்டிருக்கிறீர்கள்,அதற்கு முதலில் வாழ்த்துக்கள்.//

அவசரப்பட்டு தவறாகச் சொல்லி விட்டோம் என்று நீங்கள் உணரும் வண்ணம் விரைவில் நடந்து கொள்ள முயற்சிக்கிறேன்.

//மேலும் தெளிவு பெற,'பெரியபுராணம் ஒரு ஆய்வு'-அ.ச.ஞா. எழுதியது,படித்துப் பாருங்கள்,மேலும் உங்கள் பார்வை விரிவடையலாம் !//

அடுத்த தமிழக விஜயத்தில்?

************************************************


>>>>>>>தவறு என்று நான் சொல்லவே இல்லையே. இந்தப் பின்னணி உடைய கதை தான் இது என்கிற உணர்வோடு மட்டுமே அணுகச் சொன்னேன்.>>>>>>>>>>>

இதில் ஒரு வரலாற்றுப் பிழை இருப்பதாகவும் கருதுகிறேன்;திருத் தொண்டர் புராணம் ஒரு வழிநூல் மட்டுமே;முதநூல் அல்ல.சேக்கிழார் அரசனைத் திசைதிருப்பும் முக்கிய நோக்கில் பெரியபுராணம் எழுதவில்லை,அது நம்பியாண்டார் நம்பியவர்கள் எழுதிய திருத்தொண்டத் தொகை'யின் வழிநூல் மட்டுமே.
சேக்கிழார் தொண்டத்தொகையின் கதைகளை அந்தந்த கதை நிலங்களுக்குச் சென்று,விதயங்களை ஆய்ந்து பெரிய புராணத்தை ஒரு வரலாற்று ஆவணமாகவே படைத்தார்.
எனவே பெரியபுராண நிகழ்வுகள் கட்டுக்கதை என்று சொன்னோமென்றால்,அது நமது அறியாமையே.



>>>>>>>>>//களப்பிரர் அவர்களைத் தொட்ர்ந்த சமணர்கள் காலங்களில் தென்னிந்தியப் பகுதிகளில் நடந்த அக்கிரமங்களை வரலாற்றின் பக்கமும் சிறிது திரும்பிப் பாருங்கள்.
சமண்ர்களை சம்பந்தர் கழுவிலேற்றினார் என்பதை சமுதாய அழிவாகப் பார்க்கும் நீங்கள்,சமணர்கள் அவர்களின் கொள்கை ரீதியான எதிர்ப்பாளர்களை உயிருடன் எரித்த நிகழ்வுகள் சரித்திரத்தில் காணக் கிடைக்கின்றனவே,அதை எப்படி எடுத்துக் கொள்வீர்கள்?//

எந்த சரித்திரத்தில்? சொல்லுங்கள்; படித்துப் பார்க்கிறேன். கொள்கைக்காகக் கொலை என்பது எந்த இடத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாதது தான்.>>>>>>>>>>>

மகேந்திர பல்லவன் காலத்தில் மகேந்திரன் சமணப் பள்ளிகளில் தமது இளமைப்பருவம் முழுதையும் ஒரு சமணனாகவே கழித்தான்,அக்காலத்தின் வரலாற்றை அணுகிப் பாருங்கள்,நாவுக்கரசரும் மகேந்திரன் கையில் பெரும்பாடு பட்டார்,ஆயினும் இறை மாட்சி அவரைக் காத்ததை அறிந்து,பயந்து பின்னர் நயந்து சைவத்தை மேற்கொண்டான்.
அக்கால கட்டங்களின் சமணர்களின் கொலைபாதகங்களின் சான்றுகள் வரலாற்றில் இருக்கிறது.
பிற்காலத்தில் சம்பந்தரின் காலத்திலும் சமணர்கள்,களப்பிரருடன் சேர்ந்துகொண்டு சம்பந்தரை அழிக்க முயன்றார்கள்.
அவர்களை முற்றாக ஒழித்தாலே இதமான மத சூழல் நிலவும் என்ற சூழல் நிலவியதாலேயே,அனல்,புனல் வாதங்களுக்கு ஈடாக அவர்கள் உயிரையும்,தன் உயிரையும் அரசன் முன் பணயம் வைத்தார் சம்பந்தர்;அவர் வென்றதால் சமணர்கள் கழுவேற்றப்பட்டார்கள்,தோற்றிருந்தால் அவர் கொல்லப்பட்டிருப்பார்.
அவரைக் காத்தது தமிழும்,சைவமும்,இறையும் மட்டுமே..
அக்கால கட்டத்தில் ஓலை வைகை ஆற்றை எதிர்த்து செல்வதும்,தழலில் வேகாமல் பச்சையோலையாக ஒளிர்ந்ததும் இறை சக்தியல்லாது நடைபெற சாத்தியமல்ல;மேலும் அதில் ஏதாவது ஏமாற்று வேலை நடக்கவோ,அதை நம்பி அவர் சொல்வதை எல்லாம் கேட்கவோ பாண்டிய அரசன் முட்டாளும் அல்ல.
மேலும் மகேந்திர பல்லவனும்,பாண்டியனும் சைவத்திற்கெதிரான மன நிலையில் வெகுகாலம் இருந்து பின் நாவுக்கரசராலும்,சம்பந்தராலும்,இறை சக்தியாலும் சைவத்தை கடைப்பிடித்தவர்கள்,எனவே சரியான,அசைக்க முடியாத காரணம் இன்றி பலம் வாய்ந்த அந்த அரசர்கள் மாறுவார்கள் என நினைப்பதும் அறிவின் பாற் பட்ட ஒன்றல்ல.



>>>>>>>>>//மேலும் சைவத்தைப் பேணுபவர்கள்,சுய முயற்சியாக,ஒரு படையெடுப்பின் வழியிலோ,அல்லது மதம் பரப்பும் நோக்கிலோ எங்காவது சென்று பேரழிவுகள் நடத்தினார்கள் என்பதற்கு ஏதாவது வரலாற்றுச் சான்றுகள் தர இயலுமா?
ஆனால் சைவம்,வைணவம் தவிர மற்ற எல்லா கடவுள் கொள்கைக் காரர்களும் இத்தகைய பேரழிவுகளை,சுயமாக- suo moto-மற்றவரின் மேல் நடத்திக் காட்டியிருக்கிறார்கள் என்பதற்கு சான்றுகள் பல கானக் கிடைக்கின்றன.//

கழுவேற்றல் சமாசாரங்களை எந்த வகையில் வைப்பீர்கள் ஐயா?>>>>>>>>>>>>

இது சமணர்களின் கொலை பாதகங்களுக்கெதிரான மாற்று வினை என்றே நான் சொல்கிறேன்;ஒரு குழுவினர் அரசனைக் கைக்குள் போட்டுக் கொண்டு பல அராஜகங்களை அரங்கேற்றும் போது,அவர்களை ஒழித்தால் ஒழிய மற்றவர்கள் அமைதியாக வாழமுடியாது என்ற நிலையில்,தன் இறைசக்தி நிரூபிக்கப்பட்டால்,அவர்கள் அனைவரும் கழுவேற்றப்பட வேண்டும் என்ற நிபந்தனை முன் வைக்கப் படுகிறது;அதில் தோற்கும் பட்சத்தில் தன் உயிரையும் பணயம் வைக்கிறார் சம்பந்தர்.
இது ஒரு மறைமுகப்போர்;ஒருவர் தோற்றே ஆக வேண்டும்,சைவம் தோற்றிருந்தால் சம்பந்தர் இறந்திருப்பார்,வென்றதால் சமணர்கள் கழுவேறினார்கள்.




>>>>>>>>>>//சொல்ல வரும் கருத்தை,வாதத்தை திறமையுடன் வைக்கும் திறம்பெற்ற நீங்கள்//

ஒரு வேண்டுகோள். என்மீதான அன்பிலோ, அல்லது கடிந்து சொல்ல இருக்குமொரு கருத்தை மென்மையாகச் சொல்வதான அடிப்படையிலோ கூட இது போன்ற முத்திரைகளைத் தயவு செய்து தவிர்த்தால் நன்றி உடையவனாக இருப்பேன். என் கருத்துக்களை எப்போது தோன்றினாலும் எந்த டிகிரியில் கடிந்து சொல்வதையும் உவப்புடனேயே எதிர்கொள்வேன்.>>>>>>>>>>>>

உண்மையைத்தான் சொன்னேன்;திறனாளர்கள் நேர்மைத்திறமும் கொண்டிருக்க வேண்டும் என்று நான் நினைப்பதால் !



>>>>>>>>>//சைவம்,திருமுறை,இறைத் தத்துவம் போன்ற பலவகைகளில் பலமுறை,ஒரு சாய்வான நையாண்டிப் பார்வை,முறையையே கைக்கொள்வதிலிருந்து மாறுபட்டு,முதன்முதலில் சிறிது ஆய்ந்து விதயங்களைத் தொட்டிருக்கிறீர்கள்,அதற்கு முதலில் வாழ்த்துக்கள்.//

அவசரப்பட்டு தவறாகச் சொல்லி விட்டோம் என்று நீங்கள் உணரும் வண்ணம் விரைவில் நடந்து கொள்ள முயற்சிக்கிறேன்.>>>>>>>>>>>

நடந்தால் மிக மகிழ்வேன்.




>>>>>>>>//மேலும் தெளிவு பெற,'பெரியபுராணம் ஒரு ஆய்வு'-அ.ச.ஞா. எழுதியது,படித்துப் பாருங்கள்,மேலும் உங்கள் பார்வை விரிவடையலாம் !//

அடுத்த தமிழக விஜயத்தில்?>>>>>>>>>>>

வாழ்த்துக்கள்.

Thursday, March 20, 2008

பரிதாபத்துக்குரிய கடவுளர் மூவர் (KRS பதிவுக்கான பின்னூட்டம்)

பரிதாபத்துக்குரிய கடவுளர் மூவர் (KRS பதிவுக்கான பின்னூட்டம்)

ஐவகை நிலங்கள் மற்ற ஐவகை பகுப்புகள் சரி..
அந்த நிலங்களுக்குரிய தெய்வங்களாகத்தான் மாயோன்,சேயோன்...அகிய ஐந்து தெய்வங்களை சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன.
அதுதவிர ஏனைய தெய்வங்கள் வழிபாட்டிலேயே இல்லை என்பதற்கான தரவு என்ன?

ஒரு பள்ளியில் ஒவ்வொரு வகுப்புக்கும் வகுப்பாசிரியர் இருக்கலாம்,ஆனால் எல்லாப் பாடங்களுக்கும் வகுப்பாசிரியரே,ஆசிரியராக இருக்க வேண்டிய அவசியம் இல்லையே????????

ஒரு நடராஜ புலம்பல்

ஒரு நடராஜ புலம்பல்

நடராஜரின் நடன முத்திரைகள் அனைத்துக்கும் சித்தாந்த விளக்கங்கள்,திருமந்திரத்திலும்,மெய்கண்ட சாச்திரத்திலும் வருகிறது.
எனவே நடராஜருக்கு தமிழ்த தரவு கேட்பதற்கு என்ன சொல்வதெனத் தெரியவில்லை.

மற்றபடி பின்வருவது போன்ற சில இடங்கள் புன்னகைக்க வைக்கின்றன..

/////ஓவரா குளிர்ந்திட்டாலும் 'பாடி'ன்னு சொல்லிடுவாங்கன்னு அப்பப்போ தமிழ்ச்சூடு தர்றாங்களோ என்னவோ!/////

Sunday, March 16, 2008

குழந்தை முதன்முறையாக கெட்டவார்த்தை சொல்லும் போது

குழந்தை முதன்முறையாக கெட்டவார்த்தை சொல்லும் போது

மிகச் சரியான அணுகுமுறை,சிறார்களிடம் எப்போதுமே சிறிது உளவியல் ரீதியாகவே அணுக வேண்டியிருக்கிறது,அவர்களைப் பண்படுத்த வேண்டிய கடமை இருப்பதால் !!!
ஆனால் என்னையெல்லாம் குறும்பும்,கெடுதலும் செய்த போதெல்லாம்,முதுகில் இரண்டு போட்டுத்தான் வளர்த்தார்கள்,ஓரளவு நன்றாகத்தான் வளர்ந்திருக்கிறேன் - எடையில் அல்ல - என்று நினைக்கிறேன்..
May be, கால மாற்றங்கள் வித்தியாச அணுகுமுறையை அவசியப் படுத்துகின்றனவோ???????!!!!!

எங்கும் எதிலும் நுனிப்புல் மேய்ச்சல்

எங்கும் எதிலும் நுனிப்புல் மேய்ச்சல்
இது ஒரு கோணத்தை மட்டுமே பார்க்கும் பார்வை என நினைக்கிறேன்;பல கலைகளில்,ஆர்வமுள்ள துறைகளில் ஒரே நேரத்தில் ஈடுபடும்,அவை அனைத்திலும் ஓரளவு தேர்ச்சி அடைந்து அந்த கலையை/துறையை அனுபவிக்கும் நபர்களும் இருக்கிறார்கள்.
நீ கிரிக்கெட் விளையாட வேண்டுமென்றால டெண்டுல்கராக வேண்டும்,டென்னிஸ் விளையாண்டால் பயஸ் ஆக வேண்டும்,பாட்டு கற்றுக் கொண்டால் உண்ணிகிருஷ்ணன் ஆக வேண்டும்,எழுதப் பயிற்சி செய்தால் சுஜாதா ஆக வேண்டும் என்றெல்லாம் முன் தீர்மாணத்தில் யாரும் எக்கலையிலும்,துறையிலும் ஈடுபட முடியாது.
அவ்வாறு ஆக முடியாதெனில் அத்துறைகளிலேயே ஈடுபடக் கூடாது என்று சொல்வது சிறிது அபத்தமாகத் தான் தோன்றுகிறது.
அவரவரின் தேர்ச்சி அளவு ,அவரவரின் முயற்சி அளவுக்கு,நீங்கள் ப்ளாக் எழுதுவது உட்பட !!!!!!

Wednesday, March 12, 2008

ஜோடி நம்பர் ஒண்ணா இல்லே கேடி நம்பர் ஒண்ணா?? - கேவல dialogue delivery!


ஜோடி நம்பர் ஒண்ணா இல்லே கேடி நம்பர் ஒண்ணா?? - கேவல dialogue delivery!



///////இதில் வருகிற ஒரு நிகழ்ச்சி 'ஜோடி நம்பர் 1'. இது அப்பட்டமான அமெரிக்கத் தொலைக்காட்சியின் தழுவல். இது, 'dance with stars', 'do you think you can dance' போன்ற நிகழ்ச்சிகளின் காப்பி. ஆனா, காப்பி அடிச்சாலும், ஒழுங்கா காப்பி அடிக்கனும். சொந்தப் புத்தியில் எதுவும் அளிக்க இயலாத நம் 'தமிழ்' தயாரிப்பாளர்கள் (குறிப்பா, விஜய்). ///////////

ஏங்க,அந்த காப்பி அடிக்கிற விஜய் டிவியைக் காப்பி அடிக்கிற சன் டிவி பத்தி ஒன்னும் சொல்லலையே நீங்க?
காபி வித் அனு'க்குப் பதிலா அன்புடன்' போட்டாங்க,அது ஊத்தி மூடிடிச்சு,அதுவும் கௌதமி வந்து 'வரும் நாயர்' பாருங்கள் அன்புடன்,அப்படின்னு சொன்னதைக் கேட்டு பலரும் வெருக்கெடுத்துப் போனதாக் கேள்விப்பட்டேன்.
அதேபோல,பல நிகழ்ச்சிகளை விஜயைப் பாத்து காப்பி அடிக்கும் சன்னை என்னான்னு சொல்றது.
வாந்தி எடுத்ததை வாரித் திங்கிற மாதிரி இருக்கு.

Tuesday, March 11, 2008

சீதை விளக்கும் இராமனின் உண்மை வடிவம்

சீதை விளக்கும் இராமனின் உண்மை வடிவம்
நண்பர்களே,
இராவணன் ஏன் அவ்வாறு சொல்கின்றான் - கம்பர் வாக்கில் என்பது ஆராயப்பட வேண்டிய ஒன்று.
வால்மீகத்தையும்,இன்னும் மற்ற பிற வடமொழி இராமகாதையயும் படித்தவர்கள் கம்பனின் இராமகாதையைப் படித்தால் ஒரு பேருண்மையை தெற்றென அறிவார்கள்.
வால்மீகம் இராமனை தெய்வாம்சம் என்றே பேசுகிறது.மாலின் அம்சமாகப் பிறந்தவன் என்று போற்றுகிறது;ஆனால் சம்பவக் கோர்வைகளில் ஒரு நிறைமனிதனுக்கும் கீழாக சில இடங்களில் உணர்வு வயப்படுகிறான் வால்மீக இராமன்.(கிட்கிந்தா காண்டம்-சீதையைக் காணாதபோது,சுக்ரீவனை மட்டுறுத்த வேண்டிய வேளையில்,அயோத்யா,ஆரண்ய காண்டங்கள்-தயரதன் மறைவு,சீதையுடன் வனம் போதல்).
இந்த இடங்களில் வால்மீகம் காட்டும் இராமனின் உணர்வு வயப்பட்ட பேச்சுக்கள்,புலம்பல்கள் நிறைமனிதனின் கீழ்ப்பட்ட நிலையிலேயே இருக்கின்றன.
இத்தனையும் அவன் தெய்வாமசமான மனிதன் என்று நிறுவிய பின்னும்.

ஆனால் கம்பனின் இராமன் - முதலில் ஒரு நிறைமனிதன். அவனிடம் பரம்பொருளின் குணங்கள் இருக்கின்றன என அவனைச் சந்திக்கும் பாத்திரங்கள் வாயிலாகவே,அவர்களில் நோக்கிலே கம்பன் சொல்லிச் செல்கின்றான்.
இராமன் எந்த இடத்திலும்,ஆசிரியன்(கம்பன்) வாக்கிலோ,தன் வாக்கிலோ-Self Person- தான் கடவுளின்,பரம்பொருளின் அவதாரம் என்று சொல்லுவதில்லை;மற்ற பாத்திரங்கள் வாயிலாகவே இக்கருத்து எடுத்துச் செல்லப்படுகிறது.
இந்நோக்கிலே தான் இராவணின் இந்தப் பாடல் அமைகிறது.
ஒரு மனிதனைத்தான் நான் எதிர்த்தேன்,பகைகொண்டேன்,(என்னையே நம்பி நானிந் நெடும்பகை தேடிக்கொண்டேன்..யுத்தகாண்டம்) என்றெல்லாம் நினைத்திருக்கும் போது,கடைசி நாளுக்கும் முந்தைய நாளின் போரில் இராமனின் வன்மையைப் பார்த்தபின் இராவணனுக்கு இந்த ஐயம் வருகிறது !!!!!!!!!!

Monday, March 10, 2008

ஜடாயு ஐயா கக்கும் விசவாயு

ஜடாயு ஐயா கக்கும் விசவாயு
நீங்களும் மலேசியத் தேர்தல் முடிவுகளில் மத ரீதியான விதயங்களை வலிந்து திணிக்க முயல்வதாகத்தானே தோன்றுகிறது?
ஜெயக்குமார் வெற்றி பெற்றது அவர் ஒரு கிருத்துவராக இருந்ததாலோ,அன்வர் இப்ராகிம்,அரசு அவர் மேல் இத்தனை அவச்சொல் புழுதி வாரித் தூற்றியும் இன்று விசுவரூபம் எடுத்தது அவர் முஸ்லீமாக இருந்ததாலோ அல்ல.
மேலும் உங்கள் வாதங்கள் சரியென்றால் இந்துராப் மனோகரன் ஜெயித்திருக்கிறாரே,அதற்கு மட்டும் என்ன காரணம் சொல்வீர்கள்? அவர் இந்தித்துவத்தை உயர்த்தியதாலா???????/
சொல்லப்போனால் மனோகரனுக்கு முஸ்லீம் மலாய் மக்களே பெருமளவு ஆதரவு காட்டியிருப்பதாக பார்வையாளர்கள் கணிக்கிறார்கள்.

எல்லாவாதங்களிலும் உளுத்த கழகக் கொள்கையான மதரீதியான வெறுப்பை-அதுவும் இந்துமத ரீதியான வெறுப்பை - மட்டுமே திணிக்க ஏன் முயற்சிக்கிறீர்கள்????

தேர்தல் முடிவுகளில்,தமிழர்கள் ஸ்விங் ஆன காரணங்களில் முக்கியமான ஒன்று கோவில்கள் இடிப்பும்,இந்தியர்கள் ஒதுக்கப்பட்டதும்.இதை எல்லா பார்வையாளர்களுமே ஒத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அன்வரும்,மனோகரனும்,ஜெயக்குமாரும்,படாவியும் தங்கள் வெற்றி தோல்விக்கான காரணங்கள் முழுக்க இன,மத ரீதியான ஓரவஞ்சனைகளும்,மக்களின் எண்ணப் போக்கை முழுதும் ஒதுக்கியதும் என்பதை தெளிவாக அறிவார்கள்.

மத ரீதியான நம்பிக்கைகள்,அனுகூலங்கள் மனித வாழ்வுக்கு,சோத்னை நேரங்களில் ஒரு புத்துணர்ச்சி ஊட்டிக் கொள்ள உதவும் உளவியல் காரணி,இந்த நுண்ணிய உண்மையை அறிந்ததால்தான் முன்னேறிய,முன்னெறிக் கொண்டிருக்கின்ற நாடுகள்,மத சுதந்திரங்களை மக்களுக்கு அளித்திருக்கும் அதே நேரத்தில் மதவெறி தலைதூக்காமல் பார்த்துக்கொள்கின்றன.

திராவிடக் கட்சிகளில் மதநிந்தனையும்,ஆர்.எஸ்.எஸ்/இச்லாமியக் குழுக்களின் மதவெறியும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள்.
இதில் இந்து,பொந்து என்றெல்லாம் சொல்லிக் கொண்டு மத நிந்தனை செய்வதும் அடக்கம் !!!!!!!(ஆனால் மஞ்சள் துண்டு போட்டுக்கொள்ளலாம்,சாயிபாபாவின் காலில் விழலாம் !!!!)
இம்மாதிரியான காரியங்களுக்கான விலையைத்தான் படாவி இப்போது கொடுத்திருக்கிறார்.

***************************************

/////நண்பர் அறிவன் கூறுவதுபோல.. இந்த பிரச்சனையை மதப்பிரச்சனையாக அதன் வெற்றியாக ஊடகங்கள் பெருக்கும்போது///////

ஜமாலன்,நான் இப்பிரச்னையை மத ரீதியானதாகப் பார்ப்பதாகப் பொருள் கொண்டிருக்க மாட்டீர்கள் என நம்புகிறேன்.(நீங்கள் எழுதியதற்கு அவ்வாறும் பொருள் வருகிறது :-))

மற்றபடி கருத்தியல் நோக்கம் இல்லாது,ஆபாச அர்ச்சனைகள் செய்யும் நிறமிலி அஃறினைகள் பலர் இருப்பதையும் அறியமுடிகிறது.

சில இடங்களில் கருத்தாகக் கூட பேசக்கூடாத அனுபவக் கல்வியும் அறியக் கிடைக்கிறேன்.

******************************************

Friday, March 7, 2008

வைகாசி விசாகம்: தமிழும் சைவமும் விரும்பிய வைணவப் பெருமாள்!

வைகாசி விசாகம்: தமிழும் சைவமும் விரும்பிய வைணவப் பெருமாள்!

ரவி,இக்காலச் சூழலில் அழகான கருத்துக்கள்.
'மறந்தும் புறந்தொழா' நிலை பற்றி-
அக்கால அரசியல் சமூக சூழல்,களப்பிரர் கொள்ளைகளுக்கும் அரசுப் பிடிகளிலிருந்தும் விடுபட்ட காலம் தான் பக்தி இலக்கியம் வளர்ந்த காலம் என் நினைக்கிறேன்.இதில் சைவமும்,வைணவமும் பெருங் கிளர்ச்சியுடன் மறுமலர்ச்சி அடைந்த காலத்தில் ஒரு போட்டியாகவே இவ்வகை வாதங்கள் முன்னெடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
'மறந்தும் புறந்தொழா'க் கருத்துக்கள் ஆழ்வார்களிலேயே பலரால் சொல்லப்படிருக்கிறதுதானே?
நம்மாழ்வார்,பெரியாழ்வார் தவிர சிவத்தையும் போற்றிய ஆழ்வார்கள் குறைவெனவே நினைக்கிறேன் - தவறெனில் திருத்தவும்.
ஆனால் சைவ சித்தாந்தத்தின் உட்புகும்போது-வைணவ குருக்களில் நம்மாழ்வார் தவிர சித்தாந்தக் கருத்துக்களை கோடிட்டுச் சென்றவர்கள் இல்லையெனத் தோன்றுகிறது-அது அகச் சமயம்,அகப்புறச் சமயம்,புறச் சமயம்,புறப்புறச் சமயம் என்றெல்லாம் பேசுகிறது.
இன்னும் அறிய எவ்வளவோ இருக்கின்றதென்றும்,இவற்றை முழுதும் அறிய ஒருமனித ஆயுள் வாழ்நாள் கொஞ்சமே என்ற எண்ணம் வருவதைத் தவிர்க்க இயலவில்லை....

வாழ்த்துக்கள் !

Thursday, March 6, 2008

ஐடி நிறுவனமென்றால், ஆண்டையா?

ஐடி நிறுவனமென்றால், ஆண்டையா?சந்திரசேகரன் கிருஷ்ணன் சொல்வதில் எனக்கும் சிறிது உடன்பாடிருக்கிறது.
மனித வளத் தேவை வெள்ளத்தில் ஐடி'யில் அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்கிறது;வாய்ப்பை தன்னை மெருகேற்ற கிடைத்த வாய்ப்பாகப் பயன்படுத்துபவர்கள் முன்னேறிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
விப்ரோ நிகழ்வைப் பொறுத்தவரை,அந்த ஐடி'யாளர் பொய்யான அனுபவம் குறிப்பிட்டு வேலைக்குச் சேர்ந்தார் என்பதுதான் குற்றச்சாட்டு;மிகுந்த சம்பளம் அளிக்கப்படும் ஐடி துறை வேலைகளில்-சொல்லப் போனால்,முக்கியமான எல்லா நிறுவனங்களிலும்-பொய்த் தகவல்கள் பின்னர் கண்டுபிடிக்கப் பட்டால் ஒழுங்கு நடவடிக்கை இருக்கும் என்ற ஷரத்து,பணி ஆணையில் சேர்க்கப் பட்டே வழங்கப்படுகிறது.
இவ்வளவுக்குப் பிறகு தன்னுடைய பொய்மை வெளிப்பட்டதில் நாணாமல் நிறுவந்த்தைக் குறை கூறுவது சிறுபிள்ளைத் தனம்.
விப்ரோ தன் வேலைக்காக பொய் அனுபவத்தைப் தன் ஊழியர்களையே போடச் சொல்கிறது என்பதும் முதிர்ச்சியான வாதமல்ல;அவ்வாறு இருப்பினும் விப்ரோ நிறுவனம் செய்த ஒரு பணியைப் பற்றித்தான் - அந்த வேலையை விப்ரோவின் வேறு யாராவது ஊழியர் செய்திருப்பார்-போடுகிறது என்றால்,எப்படியும் அந்த பணியை விப்ரோ செய்திருக்கிறது என்பதில் மாற்றமில்லை.
மேலும் அவ்வாறு போடும் போதும் சம்பந்தப்பட்டவர் அந்த வேலைக்கான திறனை வளர்த்துக்கொள்வதும் முக்கியக் காரணியாகப் படும்.
மேலும் அவ்வாறு பொய்யாக காண்பிக்கப் பட்டு விப்ரோ ஒரு பணியைப் பெற்று ச்ம்பந்தப்பட்ட அந்த ஊழியர் வேலையில் சொதப்பினால்,பழியையும்,வருமானக் கழிவையும் விப்ரோ ஏற்றுக் கொள்ளும்,அதே போல் தனி நபர் பொய் சொல்லி விப்ரோவில் வேலை வாங்கி,பின் குட்டு உடைபட்டால் வேலை இழப்பை சரியாக ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான் முறை.
நான் எல்லா ஏமாற்றும் செய்வேன்,ஆனால் எனக்கு ஒரு ஏமாற்றமும் வரக்கூடாது எனச் சொல்வது முரண்.அதற்காகப் நாட்டுப் பொருளாதார சமுதாயக் காரணங்களை இழுப்பதும் அறிவீனம் என்றுதான் படுகிறது.

Wednesday, March 5, 2008

சிவராத்திரி: தீட்சிதர்களுக்கும் ஆறுமுகச்சாமி ஐயாவுக்கும் ஒரு பகிரங்கக் கடிதம்!

சிவராத்திரி: தீட்சிதர்களுக்கும் ஆறுமுகச்சாமி ஐயாவுக்கும் ஒரு பகிரங்கக் கடிதம்! நல்ல நோக்கில் எழுதி இருக்கிறீர்கள்.
ஒரே ஒரு தகவல்,எனது தொடர்புகளின் படி,திருமுறைகள் சிதம்பரத்தில் மறு அரங்கேற்றம் பெற மடங்களிம் ஆதீன கர்த்தர்களும் பின்னனியில் உதவியதாகவே அறிகிறேன்.
குறைந்தபட்சம் ஆவடுதுறை,குன்றக்குடி மடங்களைச் சேர்ந்தவர்கள்.
தீர்க்கமான நடவடிக்கைக்குக் காரணமான முதல்வர் மு.க. பாராட்டுக்குரியவர்.

தமிழ் கருவறையில் நுழையக் கூடாதா?

தமிழ் கருவறையில் நுழையக் கூடாதா?
டோண்டு ராகவன்,நீங்கள்தான் பிரச்னையை திசை திருப்ப பார்க்கிறீர்கள்.
மசூத்களில் தமிழில் ஓத வேண்டும் என எந்த தமிழ் முஸ்லீமும் வேண்ட வில்லை;மேலும் மசூதிகளுக்கான தனியான் மத சட்டம் அல்லது கோட்பாடுகள் இருக்கின்றன,அதில் அரச் தலையிடுவதில்லை.மேலும் முஸ்லீம்களுக்கான மதக் கோட்பாடுகள்,மத நூல்கள் தமிழில் உருவானவை அல்ல.
ஆனால் திருமுறைகள் இறைவனே ரசித்த நிகழ்வுகள் வரலாற்றுப் பதிவாகவே இருக்கின்றன.எனவே இதில் தீட்சிதர்கள் செய்வதுதான் அராஜகம்.
அரசு இந்த விதயத்தில் சரியாகவே செயல்பட்டிருக்கிறது.

மதுரையம்பதி,
மடத் தலைவர்கள் இவ்விதயத்தில் செயல்படாமல் இருந்தார்கள் என்பதும் சரியல்ல;ஆவடுதுறை மற்றும் குன்றக்கூடி ஆதீனங்கள் இவ்விதயத்தில் மிகுந்த ஆர்வமுடன்,ஈடுபாட்டுடன் இருந்ததை நான் அறிவேன்.

சிதம்பர ரகசியம் -அங்கே ஒண்ணும் ரகசியமே இல்லை! :(

சிதம்பர ரகசியம் -அங்கே ஒண்ணும் ரகசியமே இல்லை! :(
கீதா,நன்றி.
பொன்னம்பல மேடையில் பாடக் கூடாது எனச் சொல்ல ஒத்துக் கொள்ளவேண்டிய காரணம் வேண்டுமல்லவா?
மேலும் பகதன் பார்க்க வியலா நிலையில் கல்லடித்து நிறுவப்பட்ட நந்தியையே நகர்த்தியவன் இறவன்;அருந்தமிழ் பதிகத்தால் வேண்ட இறந்த பூம்பாவையை உயிர்ப்பித்தவன் இறைவன்.
அந்த தமிழ்க் காதலன் செவியில்,பொன்னம்பலத் தமிழ் கேட்கக் கூடாது என,அதுவும் தமிழகத்தில் சொல்வது அடாவடியாகவும்,அறிவீனமாகவும்தான் தோன்றுகிறது.
உங்களைப் புண்படுத்தும் நோக்கமல்ல எனது கருத்து என்பதை உணர்வீர்கள் என்றே நம்புகிறேன்.

சமீபத்திய பதிவுகளும், ஒரு புதிய பதிவனும்...

சமீபத்திய பதிவுகளும், ஒரு புதிய பதிவனும்...
நண்பரே,ஆரோக்கிய சமூகத்திற்கான அளவு கோல்கள் பதிவுலகில் இல்லை என்பதை நான் புரிந்திருக்கிறேன்.
பதிவுலகின் பல குழுக்களில்-திராவிடம்,பிராமணர்,கம்யூன்,இன்னும் மற்றபிற என பலர் இருக்கிறார்கள்.

சமூகம் என்பதற்கு அவரவர் பார்வையில் ஒரு defenition இருக்கிறது.பொதுநன்மையைக் கருதும் கூட்டம் சொற்பமாகவும் குழுவில்லாமலும் இருக்கிறது.

அவர்களுக்கு இரண்டு வழிகள் இருக்கின்றன

ஒன்று-அவர்களெல்லாம் ஒரு குழுவாவது !

இரண்டு - விரும்பியதை- நேர்பட எழுதிவிட்டு வேடிக்கை பார்ப்பது.

Thursday, February 28, 2008

ஶ்ரீரங்கம் “சுஜாதா” ரெங்கராஜன்

ஶ்ரீரங்கம் “சுஜாதா” ரெங்கராஜன்

////வைணவம், அறிவியல், புதினம், சிறுகதை என்று ஆர்வமுள்ள துறைகளில் முத்திரை பதிக்கும் படைப்புகளை அறுபது வயதுக்குப் பின் படைக்கப் போகிறார் என்று பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் சென்னைப் பிரவேசத்திற்குப் பின் குமுதம், மணி ரத்னம், ஷங்கர் என்று வர்த்தகம் அவரை முழுமையாக விழுங்கிவிட்டது. /////

இது முழுக்க உண்மையில்லை எனத் தோன்றுகிறது.அவர் ஆரம்பம் முதலே ஜெ.கா. போலவே தி.ஜா. போலவோ அல்லது லா.ச.ரா போலவெ ஒரு பிம்பமெடுத்துக் கொள்ளவில்லை.அப்படி இருந்திருந்தால் பலர் அந்த வரிசைகளில் இவரையும் சேர்த்து ஆகா என்றிருப்பார்கள்..ஆனால் அவர் இவர்கள் எல்லோரும் கலந்த ஒரு கலவையானார்;அவரின் சுருக்கமான மந்திரம்,சுவாரசியமான,தகவல்களுடனான எழுத்து.
அந்த எழுத்துக்கான மொழி,'பீகாரில் வெள்ளம்' என்ற ரீதியிலான அக்கால நியூஸ் ரீல் போல சவ சவ என்றிருந்திருக்க வேண்டிய வேளையில்,கத்தி வீச்சுப் போல கூர்மையையும் ஒளியையும் பெற்றிருந்தது.....
அதில்தான் அவர் வென்றார் !!!!!!

Wednesday, February 27, 2008

ஆசான் சுஜாதாவிற்கு அஞ்சலி

ஆசான் சுஜாதாவிற்கு அஞ்சலி

////'கண்கள் பனித்தன' 'நா தழுதழுத்தது' என்றெல்லாம் cliche-வான வாக்கியங்களை எழுதினால் அவரின் ஆன்மா கூட மன்னிக்காது என்பதால்.....

Good-bye ஆசானே. ////////

உண்மை, ஐந்து கோடித் தமிழர்களில் தமிழில் எழுதும் சுமார் இரண்டு கோடிப் பேருக்காவது அவர் மானசீகமான ஆசானே...
அவரை நிரம்பவும் தொலைத்திருக்கிறோம் !!!!!

ஒரு நாள் ஒரு கனவு

ஒரு நாள் ஒரு கனவு
இவற்றில் பல மேற்கத்திய,சிங்கப்பூர்,துபாய் போன்ற நாடுகளில் நடைமுறையாய்த்தான் இருக்கின்றன.
நம்மால் ஏன் இயலவிலை?
நானும் ரொம்பவும் யோசித்து விட்டேன்,உருப்பட விடாத,கேடுகெட்ட தலைவர்களிடமிருந்தும்,கட்சிகளிடமிருந்தும்தான் அனைத்து சீர்கேடுகளும் ஆரம்பமாவதாகத் தோன்றுகிறது.
முறையான ஒரு விதயத்திற்குக் கூட விதிகளுக்குட்பட்டு அரசு இலாக்காக்களில் லஞ்சமளிக்காமல் ஒரு காரியமும் நடை பெற முடிவதாகக் காணோம் !!!!!!!
ஆக தவறு எங்கே இருக்கிறது????

Tuesday, February 26, 2008

விடுதலைப்போரும் வீரபாண்டிய கட்ட பொம்மனும், சமூக பின்னணியும்!

விடுதலைப்போரும் வீரபாண்டிய கட்ட பொம்மனும், சமூக பின்னணியும்!
வவ்வால்,
இது ஒரு நல்ல கோணத்தில் அமைந்த பதிவு.
ஆயினும் கட்டபொம்முவும்,திப்புவும் தென்னாட்டில் ஆங்கிலேயர்களுக்கு சரியான எதிர்ப்பைக் காட்டினார்கள் எனபது உண்மை.
மேலும் கட்டபொம்மு பற்றிய சிறிது வீரமில்லாத,தரக்குறைவு போல தோன்றும் செய்திகள் உண்மையல்ல என்பது என் எண்ணம்.
விடுதலைப் போரில் தமிழகம்-மபொசி'யின் இரண்டு தொகுதிகளை சிறிது பார்த்து விடுங்கள்!!!!
***********************
அறிவன்,
நன்றி!

//மேலும் கட்டபொம்மு பற்றிய சிறிது வீரமில்லாத,தரக்குறைவு போல தோன்றும் செய்திகள் உண்மையல்ல என்பது என் எண்ணம்.//

கட்டபொம்மு வீரம் குறித்து தரக்குறைவு என்று சொல்ல முடியாது, ஆனால் அந்த தகவல்களிலும் சில கருத்துக்கள் உள்ளது. ஏன் எனில் அக்கால சூழல் அப்படி, எனவே சூழ் நிலைக்கைதி என்ற நிலையினால் அடங்கி இருக்கவும் நேரிடும்.

ஆனாலும் கட்டபொம்மு விடுதலைப்போராட்டத்தில் ஒரு முன்னோடி என்பதை யாரும் மறைக்கவோ ,மறுக்கவோ முடியாது.

உதாரணமாக கட்டபொம்மு வரிக்கொடுக்காத சுதந்திர பாளையக்காரனாக இருந்ததில்லை, அதற்கு முன்னரும் ஆர்க்காட் நவாப்புக்கு வரிக்கட்டிக்கொண்டு இருந்தவர்கள் தான்.பின்னர் வெள்ளையர்கள், வரித்தொகை அதிகம் கேட்கவும் தான் எதிர்ப்பு கிளம்பியது. இல்லை எனில் கட்ட பொம்முவும் இணக்கமாகவே இருந்திருக்க கூடும்.

ஆனால் இந்திய வரலாற்றில் உள்ள பிரச்சினை என்னவெனில் சரியாக ஆவணப்படுத்தாமையே.

//விடுதலைப் போரில் தமிழகம்-மபொசி'யின் இரண்டு தொகுதிகளை சிறிது பார்த்து விடுங்கள்!!!!//

இந்த புத்தகத்தை சமீபத்தில் நூலகத்தில் பார்த்தேன், பிறகு படிக்கணும் என்று குறித்துவைத்துள்ளேன். இந்தப்பதிவு போட்டு ஒரு வருடம் மேல் இருக்கும், அப்போது அறிந்ததை வைத்துப்போட்டது.இப்போது பார்க்கும் போது இன்னும் கொஞ்சம் நன்றாக பதிவிட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது.

***************************
மோகந்தாஸின் இந்த பதிவில் என்னுடைய பதிலையும் பாருங்கள்.

http://imohandoss.blogspot.com/2005/10/blog-post_17.html

Thursday, February 21, 2008

'ப்ளாக்' பற்றிய தொலைக்காட்சி நிகழ்ச்சி: சில கருத்துக்கள்.

'ப்ளாக்' பற்றிய தொலைக்காட்சி நிகழ்ச்சி: சில கருத்துக்கள்.

//// கல்வெட்டு (எ) பலூன் மாமா said...
வலைப்பதிவு என்பது ஒரு சுதந்திரமான ஒன்று. கேட்க யாரும் இல்லாவிட்டாலும் பார்க்-ல் ஸ்டூல் மேல் நின்று பேசுவதைப்போல/////

/////////Kasi Arumugam - காசி said...
கவிதையிலெல்லாம் ஆர்வமில்லாத எனக்கு இது மிகவும் உறுத்தலாகத் தெரிகிறது. உங்களுக்கும் மயுரனுக்கும்கூட அதே சிந்தனை வருவதில் வியப்பில்லை. ஆங்கில வலைப்பதிவுகளில் புனைவுகள் எழுதுபவர் பத்தில் ஒன்றுகூட இல்லை, ஆனால் தமிழனை கற்பனையிலேயே மூழ்கடிக்க போட்டிபோட்டுக்கொண்டு பத்திரிகைகளோடு இப்போது வலைப்பதிவுகளும் வரிந்துகட்டுகின்றன. இது சரியான அறிகுறியல்ல (இதை இங்கே சொல்வது பலருக்கும் பிடிக்காது என்று தெரிந்தாலும் இதுதான் உண்மை). காத்திரமான வாழ்வியல் சிந்தனைகள், அன்றாட வாழ்க்கைக்குப் பயனுள்ள தகவல்கள் அதிகம் எழுதப்படாததும், எழுதப்படுபவை கவனம் பெறாததும் இதனாலேயே. என்று எழுத்தாளனாகும் ஆசையை விட்டொழிக்கிறாரோ அன்றே ஒரு வலைப்பதிவர் தன் முழு வீச்சையும் வெளிப்படுத்த முடியும். மாறாக பத்தியாளனாக (columnist) ஆசை வையுங்கள் என வேண்டுகோளை முன்வைக்கிறேன் //////

ரசிக்க வைத்த,சிந்திக்க வைத்த,ஒத்துக் கொள்ள வேண்டிய கருத்துக்கள்.

Monday, February 18, 2008

பெண்களின் அரசியல் அறிவு

பெண்களின் அரசியல் அறிவு


உண்மையில் பெண்களுக்கான சரியான அரசியல் பார்வையும் அறிவும் குடும்பத்தின் குழந்தைகள் நல்ல பொது நோக்குப் பார்வையுடன் வளர்வதை ஏதுவாக்கும்.
எங்கள் வீட்டிலேயே (நான் சிறுவனான)ஆரம்பநாட்களில் அப்பா ஒரு கட்சித் தலைவரை,நல்ல தமிழறிஞர் என சிலாகித்து அதனால் அவரை ஆதரிப்பார்,தேர்தல் காலங்களில் அம்மாவையும் அந்த குறிப்பிட்ட கட்சிக்கு ஓட்டளிக்கத் தூண்டுவார்.அம்மா தினமணி கட்டாயம் படிப்பார்,மேற்கொண்டு ஏதும் பேச்சு இருக்காது..
பின்னர் எனது சிறகுகளும் பார்வைகளும் விரிய,எனது இயல்பான அரசியல் பார்வையும் நோக்கும்,பல உலக அளவிலான விதயங்களை வீட்டு வரவேற்பறை விவாதங்களுக்கு உட்படுத்தும் போது,ஏதாவது சந்தேகம் தோன்றினால் கூட,'நீ ஏண்டா அப்படி சொல்ற?' என தூண்டி விவாதம் கருத்தாக்கங்களுக்கும்,தெளிவுக்கும் செல்ல வழி வகுப்பார்.
பெண்களுக்கான சமூகப் பார்வை,இயல்பாகவே நுண்ணியது;அரசியல் பார்வை இணையும் போது அது அவர்களை இன்னும் விவரம்றிந்தவர்களாக-informative-ஆக ஆக்கும்...

திண்ணை எப்போது காலியாகும் ?

திண்ணை எப்போது காலியாகும் ?

சரியான கண்ணோட்டத்தில் அமைந்த எழுத்து..
இது ந்டக்கலாம் என்றே நான் நினைக்கிறேன்.
ஆனால் அதற்குள் தேவைக்கும் மேல் உள்நுழைந்து-in road- விடலாம் என்ற கணிப்பே விகா.தைரியமாக இறங்கியது.
முக.என்ற மனிதரின் முக விலாசமும்,தனிமனித நட்பு நாகரிகமும் ரஜினியை மிகவும் தடுக்கின்றன.

12:24 PM, February 18, 2008
கோவி.கண்ணன் said...
//அறிவன் /#11802717200764379909/ said...
முக.என்ற மனிதரின் முக விலாசமும்,தனிமனித நட்பு நாகரிகமும் ரஜினியை மிகவும் தடுக்கின்றன.
//

அறிவன் சார்,

நீங்கள் எளிமையாக சொல்லி இருப்பதை இடுகை எழுதும் போது எனக்கு சொல்லவதற்கு வரவில்லை. அதே பொருளில் தான் எழுதினேன். சரியாக தொட்டு இருக்கிறீர்கள். பாராட்டுக்கள். மற்றும் நன்றி !

Sunday, February 17, 2008

அவ்வளவு சீக்கிரம் இந்திய அரசியல் அரங்கம் திருந்த விட்டு விடுவோமா?

அவ்வளவு சீக்கிரம் இந்திய அரசியல் அரங்கம் திருந்த விட்டு விடுவோமா?

வித்தியாசமான செய்திகளைத் தேடிப் பதிவிடும் முயற்சி பராட்டப்படவேண்டியது.
(நானும் இதைப் போன்ற சிந்தனைப் போக்கு உள்ளவெனே,எ.கா-இச்செய்தி கண்ணில் பட்டிருந்தால் இதையே செய்திருப்பேன்).
படிக்க ஆரம்பித்தபோதே இளம் உறுப்பினர் ராகுல்'ஆக அல்லது கனிமொழியாக(நப்பாசை??!!!!!!!) இருக்கக் கூடும் என ஊகித்தேன்.
கவனத்தில் வர வேண்டிய செய்திப் பதிவு,குறைந்தபட்சம் இளம் அரசியல்வாதிகளில் அங்கங்கே சிறிதாவது நம்பிக்கைக் கீற்றுகள் தெரிவது இந்திய அரசியலுக்கு நல்லது.
ஆனால் நம்பிக்கையை வளர விடமாட்டார்கள் போலிருக்கிறது,என்கிறது செய்தியின் சாரம் !

ஆங்கில பாடப் பயிற்சி - 2 (Grammar)

ஆங்கில பாடப் பயிற்சி - 2 (Grammar)
தமிழ்மண பதிவுப் பட்டைக் கருவியை ஆக்கம் செய்தால்,வேண்டுபவர்கள் ப்டிஎப்'ல் சேமித்துக் கொள்வார்களே?
Wren & Maritn அல்லது Jhonson & Martin பயிற்சிகளையும் சேருங்கள்..
பலருக்கும் உதவியாக இருக்கக் கூடும்.

இந்தி மொழிக்கு யாராவது இதைச் செய்தால் நன்றாக இருக்கும்;என்னைப் போன்றவர்களுக்கு உதவியாக இருக்கும்.

மிகநல்ல ஒரு முடிவு

மிகநல்ல ஒரு முடிவு
உண்மையில் வரவேற்கப் பட வேண்டிய ஒரு செய்தி.
இதில் சட்ட அமைச்சகமோ அல்லது அரசின் அமைப்புக்களோ நேரடியாக எந்த அளவு தலையிட முடியும் என்பதில் கவனம் தேவை என்பதும் நினைவில் கொள்ள வேண்டிய ஒன்று.
பாராளுமன்றத்தின் இம்பீச்மெண்ட் என்றால் அது ஒழுங்காக இருக்கும்.இல்லையெனில் ஆளும் தரப்பு இதனையும் வளைத்து,நீதிபதிகளை அச்சுறுத்தும் வாய்ப்புகளும் உள்ளன.

//////அருமை.

நீதித்துறை என்பது சமூகத்தை காப்பது அல்ல கட்டுப்படுத்துவது./////////

அதற்குக்கூட அல்ல,நெறிப்படுத்த உதவி செய்வதாக இருக்கவேண்டும் என நினைக்கிறேன்.

Saturday, February 16, 2008

உணர்ச்சிவசப்படாமல் சிந்திக்க வேண்டிய ஒரு தகவல்.

உணர்ச்சிவசப்படாமல் சிந்திக்க வேண்டிய ஒரு தகவல்.
///////அப்பாவி இளைஞர்களை அப்படி மூளைச் சலவைக்குத் தயாராக்கும் காரணிகளை இந்து மதத்தின் காவலனாகக் காட்டிக் கொள்ள முயலும் போலிகள் தான் ஏற்படுத்துகிறார்கள் ////////

இது எப்படி என கொஞ்சம் விளக்குவீர்களா?

////////திடீர் திடீரென்று முளைக்கும் புதிய மதர்ஸாக்களில் தவறு நடக்க வாய்ப்பு இருக்கின்றது என்கிற வாதம் நம்முடைய உளவுத் துறையின் பலவீனத்தைத் தான் காட்டுவதாக அமையும். பொற்கோயிலில் ஒருமுறை நடந்த தவறுக்காக எல்லா குருத்வாராக்களும் சந்தேகத்துக்கு உள்ளாக்கப்படவில்லை; ஒரு காஞ்சி மடத்தில் நடந்த கேவலத்துக்காக எல்லா மடங்களும் தீண்டத்தகாதவை ஆக்கப்படவில்லை. ஆனால் இந்த தேசத்தில் முஸ்லிம் என்கிற வார்த்தையை ஒருவிதமாக அந்நியப்படுத்தும் முயற்சி விடாமல் நடந்து வருகிறது.//////////

POK பகுதிகளில் இந்தியாவிற்கு எதிராக மட்டுமல்ல,பொதுவாகவே முஸ்லீம் அடிப்படைவாத சக்திகள் ஊக்குவிக்கப் படுகின்றன முகம்மதிய மத கட்டமைப்புகளே செய்கின்றன என்பதை அமெரிக்க அரசாங்கமே இப்போது உணர்ந்திருக்கிறது,அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒபாமா வெற்றிபெரும் பட்சத்தில் பாகிஸ்தாம் மேல் விமானத் தாக்குதல் கூட நடைபெறலாம் என அமெரிக்க ஊடகங்களே கருத்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் வேறு எந்த மத அமைப்புகள் நாசவேலைகள் செய்வதற்கெனவே குறிப்பாக பயிற்சி கொடுக்கிறார்கள் எனச் சொல்ல முடியுமா???

உங்கள் பதிவு ஒருதலைப்பட்சமான கருத்துக்களை எடுத்து வைப்பதாகவே தோன்றுகிறது.

Friday, February 15, 2008

ஜெயலலிதா

ஜெயலலிதா

நீங்கள் உட்பட எல்லோரும் விஜயகாந்தை மிக குறைவாக மதிப்பிடுகிறீர்கள் எனத் தோன்றுகிறது.
கோபால்சாமி போல விகா.உணர்ச்சி வேகத்தில் கட்சி ஆரம்பித்தவரில்லை;அவர் ஒரு force to reckon ஆகவே இருப்பார் எனவே நான் கருதுகிறேன்.
முக.வுக்குப் பிந்தைய தமிழகத்திற்கு அது நல்லதுவும் கூட !

Tuesday, February 12, 2008

சு.சாமியின் வியாதி பலருக்கும் தொற்றியது ?

சு.சாமியின் வியாதி பலருக்கும் தொற்றியது ?

இப்பதிவைப் பொறுத்தவரை Dreamer ன் கருத்துக்களுடன் நான் ஒத்துப் போகிறேன்.
Defenitely,it's leaders with vision that makes the difference.
Singapore doesn't fall from heaven to earth on one fine morning.
It needed a great visionary called LKY to build it to its today's status.
LKY had written his early years of interaction with indian prime ministers,starting from Nehru to Indira.(late 1950 & early 1960's).
He had beautifully portrays what we can call as erotion of standard in Indian politicians.

Sunday, January 20, 2008

ALOPECIA- புழுவெட்டு

ALOPECIA- புழுவெட்டு

பலரும் பல விதயங்கள் சொல்வார்கள்...
மதுரைப் பக்கம் யாராவது இருந்தால்,செல்வார்களாயின் விளக்குத்தூண் பகுதியில் கடைகளில் 'காஷ்மீர் குசம்' என்ற ஒரு கலவை பாக்கெட் விற்பார்கள்;இது சுமார் 15-20 நாட்டு மருந்துகளின் கலவை,ஒரு பாக்கேட் விலை ரூ 20.க்குள் தான் இருக்கும்;ஒரு பாக்கெட் கலவையை சுமார் 300 மிலி கண்ணாடி அல்லது செராமிக் கலனில் (பிளாஸ்டிக்,மெட்டல் கலன்கள் வேண்டாம்)தேங்காயெண்ணெயில் ஊறவைத்து ஒரு சுத்தமான மெல்லிய வெள்ளைத் துணியால் மூடி நல்ல சூரிய வெய்யிலில் சுமார் 15 நாட்கள் ஊறவைத்து,காயவைக்கவும்.
ஒவ்வொரு நாளும் இரவில் நன்கு கலந்து மறுநாள் காயவைக்கவும்.
பின்னர் தெளிவாக வடித்துக் கொண்டு(பில்டர் செய்ய வேண்டிய அவசியமில்லை,தெளியவைத்து பாட்டில் மாற்றினாலே போதும்),அந்த பாக்கெட்டுடனேயே ஒரு சிறிய பாட்டிலில் வாசனைத் தைலம் கொடுத்திருப்பார்கள்,அதை ஊறவைத்து வடித்தெடுத்த எண்ணெயுடன் சேர்த்து கலந்துகொண்டு(சூப்பரான வாசனைத் தைலம் தயார் !) தினமும் மயிர்க்கால்களில் தடவி மசாஜ் செய்து சுமார் 45 நிமிடங்கள் கழித்து கடலை மாவு/பயத்தம் மாவு/சுத்தமான் சீயக்காய்த் தூள் போட்டு குளித்துவிடலாம்.அல்லது நாள் முழுதும் எண்ணெய் தேய்த்துக் கொள்ளும் பழக்கம் இருந்தால் சிறிதளவாக எடுத்து,நன்றாக மசாஜ் செய்து கொண்டு,தலைக்கு நீர் விடாமல் தலை சீவிக் கொள்ளலாம்.

எப்படி இருப்பினும் வாரத்தில் ஒருநாளாவது நன்றாக மிகுதியான எண்ணை மசாஜ் செய்து தலைக்கு நீர் விட்டு அலச வேண்டியது முக்கியம்.

முக்கியமாக தவிர்க்க வேண்டியது: அனைவரும் சொல்லும் எல்லா வைத்தியத்தையும் ஒவ்வொரு மாதம் பரிசீலித்து முயற்சிப்பது ! தலைமுடியை முழுதும் போக்கடிக்க இதைவிட சிறந்த வழி வேறு எதுவும் இல்லை !!!!!!

பொறுமையுடன் முயற்சி செய்யவும்,குணம் உண்டு.

கோட்டக்கல் ஆர்யவைத்ய சாலையில் மகாதிக்தகஷாயம் என்ற ஒரு கஷாயம்ம் உண்டு.

அதை ஒரு பாட்டில்(250 மிலி) வாங்கி காலையில் வெறும் வயிற்றில் உணவுக்கு 3 மணி நேரம் முன் சுமார் 15 மிலி அளவில் warm watter உடன் கலந்து பருகச் சொல்லவும்.

மருந்து ரொம்ப இனிப்பாக(!) இருக்கும்,பரவாயில்லை விழுங்கி விடவும்,நாள்பட்ட உடலின் கசடுகளால் ரத்தம் கெடுவதாலேயே தோல்நோய்கள் வருகின்றன,இதை சரி செய்யும் மிகச் சிறந்த மருந்து இது.

அதிக நேரம் இரவில் விழிப்பது தவிர்க்க வேண்டும்;குறைந்தது 6 மணி நேரத் தூக்கம்,15 நாட்களுக்க்கு ஒருமுறையாவது உடல்முழுதும் நல்லெண்ணை தேய்த்து வெண்ணீரில் குளியல் ஆகியவை உடலை மேம்படுத்தும்.

இல்லத்தரசிகளின் இன்னல்கள்

இல்லத்தரசிகளின் இன்னல்கள்


அருமையான பதிவுங்க..
நம்ம ரங்கமணி பாத்தா,'பாரு,உனக்குத்தான் மதுமதி எழுதி இருக்காங்கன்னு கமெண்டு வரும்....
அதிலும் கணினித் துறையில் கொஞ்சம் பதவி உயர்ந்து மேலாளர் நிலையிலிருப்பவர்களுக்கு அலுவலகத்தின் அழுத்தங்கள் நிறைய உண்டு.
உங்க தங்கமணி இப்பதிவுக்கு சொல்லும் பதிலையும் ஒரு பதிவா அவரை எழுதச் சொன்னா சூப்பரா இருக்கும் !!!!

தேட...